நீ கவலைப்படாம விளையாடுப்பா??.. ரோகித் சர்மா மீது குவியும் விமர்சனங்கள்.. இர்ஃபான் பதான் ஆதரவுக்குரல்
மும்பை: இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஃபார்ம் அவுட்டாகி திணறி வருவதாக விமர்சனங்கள் குவிந்து வரும் சூழலில் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் ஆதரவுக்குரல் கொடுத்துள்ளார்.
2023ம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்காக தயாராகி வரும் இந்திய அணியில் தற்போதைக்கு அனைத்து வீரர்களும் மிகச்சிறப்பான ஃபார்முக்கு வந்துவிட்டனர். குறிப்பாக இலங்கை, நியூசிலாந்து தொடர்களில் தொடர்ச்சியாக 300+ ரன்களை இந்தியா குவித்து வருகிறது.
ஆனால் கேப்டன் ரோகித் சர்மாவின் செயல்பாடு மீது தான் ரசிகர்கள் கவலைக் கொண்டுள்ளனர். ஏனென்றால் கடைசி 50 சர்வதேச இன்னிங்ஸ்களாக ஒரு சதம் கூட அடிக்காமல் விளையாடி வருகிறார்.

ரோகித்தின் ஃபார்ம்
இலங்கையுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் அதிரடியாக ஆடிய அவர் 67 பந்துகளில் 83 ரன்களை விளாசினார். இதே போல 3வது போட்டியில் 42 ரன்களை அடித்தார். ஆனால் அவரால் சதத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்யவில்லை. நியூசிலாந்துடனான முதல் ஒருநாள் போட்டியிலும் 34 ரன்களை அடித்து துரதிஷ்டவசமாக அவுட்டானார். இதனால் அவர் ஃபார்ம் அவுட்டாகிவிட்டதாக ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

இர்ஃபான் பதான் ஆதரவு
இந்நிலையில் ரோகித் சர்மாவுக்கு இர்பான் பதான் ஆதரவுக்குரல் கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ரோகித் சர்மா மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் தேர்வு செய்யும் ஷாட்கள் சிறப்பாகவே உள்ளன. குறிப்பாக கவர் திசையில் விளையாடும் ஷாட்களும், ஃபுல் ஷாட்டுகளுமே அவரின் ஃபார்மை காட்டும். ஆனால் அனைவரும் அவர் ஆட்டம் இழந்து வெளியேறும் அந்த ஒரு பந்தை மட்டுமே யோசித்து பேசி வருகின்றனர்.

ஒரே ஒரு இன்னிங்ஸ்
ரோகித் சர்மா ஃபார்ம் அவுட் ஆனதாக நான் நினைக்கவில்லை. ஏனெனில் ரோகித் சர்மாவை பொறுத்தவரை இது போன்ற பேச்சுகளை எல்லாம் கவலைப்பட தேவையில்லை. அவர் ஒரு போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவிட்டால், அதன்பின்னர் தொடர்ச்சியாக கலக்குவார். அவரின் பாணியில் விளையாடிவிட்டால் இந்தியாவுக்கு பலமாக இருக்கும் என இர்ஃபான் பதான் கூறியுள்ளார்.

அடுத்த போட்டி
இது ஒருபுறம் இருக்க, நியூசிலாந்துடன் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 1- 0 என முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளும் மோதும் 2வது ஒருநாள் போட்டி நாளை ராய்பூரில் உள்ள சாஹீத் வீர் நாராயன் சிங் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஒருபுறம் வெற்றி பாதையை தொடர இந்திய அணியும், மறுபுறம் பதிலடி கொடுப்பதற்காக நியூசிலாந்து அணியும் முணைப்பு காட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications