
21 ஆண்டு சாகச பயணம்
இந்திய மகளிர் அணியின் ஒருநாள் போட்டிகளின் கேப்டனாக செயல்பட்டு வருபவர் மிதாலி ராஜ். இந்திய மகளிர் கிரிக்கெட் வெளிச்சத்திற்கு வரவும், அவர்களின் சாதனைகளையும் ரசிகர்கள் கொண்டாடவும் காரணமாக இருந்தவர் இவர் என்றும் கூறலாம். இவரது சாதனைகளை பயோ பிக்காக எடுக்கும் அளவிற்கு இவர் மிகவும் பிரபலமாக விளங்குகிறார்.

முதல் போட்டியில் சதம்
தன்னுடைய 16வது வயதில் 1999ல் இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் தன்னுடைய முதல் போட்டியை விளையாடினார். ஆச்சர்யம் என்னவென்றால் முதல் போட்டியிலேயே சதத்தை விளாசி இளம்வயதில் சதமடித்த வீராங்கனை என்ற அடையாளத்தை பெற்று அனைவரையும் கவர்ந்தார். அதன் பிறகு தற்போது வரை 21 ஆண்டுகள் அவரது வாழ்க்கையில் சாதனைகளே அதிகம்.

மிதாலி பெருமிதம்
தன்னுடைய இந்த 21 ஆண்டு சாதனை பயணத்தில் உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் டபள்யூ.சி.ஏ.ஐ முதல் பிசிசிஐ வரை ஏராளமான மாற்றங்களை தான் சந்தித்துள்ளதாக பெருமை தெரிவித்துள்ளார் மிதாலி. மேலும் உள்ளூர் ஸ்டேடியம் முதல் சர்வதேச மைதானங்களிலும் தான் ஆடியுள்ளதையும் நினைவு கூர்ந்துள்ளார்.

4 தலைமுறையுடன் போட்டி
தன்னுடைய 21வது வயதிலேயே கேப்டன் பொறுப்பை ஏற்ற மிதாலி ராஜ், தொடர்ந்து விளையாடி வருகிறார். தன்னுடைய வளர்ச்சி தன்னுடைய அணி வீராங்கனைகளுடன் இணைந்தே காணப்படுவதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார். தான் அணியில் இணைந்தபோது மூத்த வீராங்கனைகளுடனும், பின்பு சக வயதினருடனும், ஜூனியர்களுடனும் தற்போது இளம் வயது வீராங்கனைகளுடனும் என 4 தலைமுறையினருடன் விளையாடியுள்ளதாகவும் இது மிகப்பெரிய பெருமையை அளிப்பதாகவும் மிதாலி கூறியுள்ளார்.

தன்னம்பிக்கை அளிக்கும் சாதனைகள்
சச்சினுக்கு பிறகு தனக்கு இந்த பெருமை கிடைத்துள்ளதாகவும் மிதாலி ராஜ் குறிப்பிட்டுள்ளார். 2005 உலக கோப்பை போட்டி உள்ளிட்டவற்றில் சிறப்பாக விளையாடியதாகவும், தனது ஒவ்வொரு மைல்ஸ்டோனும் தனக்கு மட்டுமின்றி தன்னுடைய அணியினருக்கும் தன்னம்பிக்கையை அளித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications