
இந்தியா -ஆஸ்திரேலியா மோதல்
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடர் கடந்த 21ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப்போட்டி நாளை மறுதினம் மெல்போர்னில் நடைபெறவுள்ளது. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டியில் கடந்த முறை கோப்பையை கைப்பற்றியுள்ள ஆஸ்திரேலியாவுடன் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு சென்றுள்ள இந்தியா மோதவுள்ளது.

ஆடாமலேயே ஜெயித்த இந்தியா
அரையிறுதியில் இங்கிலாந்து அணியுடன் இந்தியா மோதவிருந்த நிலையில், மழையின் குறுக்கீடு காரணமாக இந்தியா ஒரு பந்தை கூட எதிர்கொள்ளாமல் புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது. இதனிடையே அதே இடத்தில் நடந்த தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியும் மழையால் தடைபடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போட்டி நடைபெற்று ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

நாளை மறுதினம் இறுதிப்போட்டி
இதனிடையே நாளை மறுதினம் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன. இந்த இரு அணிகளும் தொடரின் முதல் போட்டியிலேயே மோதிய நிலையில், இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வெற்றி கொண்டது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸி பௌலர் காட்டம்
இதனிடையே ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சாளர் மேகன் ஷட், இந்தியாவுடன் விளையாட விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக துவக்க வீராங்கனைகள் ஸ்மிரிதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மாவிற்கு தான் சரியான போட்டியாளர் இல்லை என்றும் அவர்களுக்கு பந்துவீச தன்னை தேர்ந்தெடுக்க வேண்டாம் என்று தன்னுடைய அணியின் கேப்டன் மென் லேனிங்கிடம் தான் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அலறடித்த இந்திய துவக்க வீராங்கனைகள்
கடந்த மாதம் நடைபெற்ற முத்தரப்பு தொடரில் இந்திய துவக்க வீராங்கனைகளுக்கு மேகன் ஷட் பந்து வீசிய நிலையில், அவரது முதல் பந்தை எதிர்கொண்டு ஆடிய ஷபாலி பவுண்டரியையும், மந்தனா சிக்சையும் அடித்தனர். அந்த ஒரு ஓவரில் மட்டும் இருவரும் இணைந்து 16 ரன்களை குவித்தனர்.

மேகன் ஷட் அலறல்
தன்னுடைய முதல் பந்திலேயே மந்தனா சிக்ஸ் அடித்ததே தன்னுடைய கேரியரில் தன்னுடைய பௌலிங்கின் முதல் பந்தில் இதுவரை அடிக்கப்பட்ட அதிக ரன் என்று ஷட் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய பந்துகளை இந்திய துவக்க வீராங்கனைகள் மிகவும் எளிதாக அடித்து தள்ளுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்கொள்ள தயார்
இதனிடையே நாளை மறுதினம் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனைகளுக்கு நெருக்கடியை அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் மேகன் ஷட் கூறியுள்ளார். இந்திய அணியுடன் சமிபத்தில் விளையாடியுள்ள போட்டிகள் இதற்கு உதவிபுரியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











