கோலி - ரோஹித் விரிசல்
2019 உலகக்கோப்பை தொடரின் இறுதியில் ரோஹித் சர்மா - விராட் கோலி இடையே பெரும் விரிசல் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், பிசிசிஐ அதற்கு மறுப்பு தெரிவித்தது. எனினும், இது குறித்து, தினமும் புதுப் புது செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது.
இனி மறைக்க முடியாது
ஆனால், இனி மறைக்கவே முடியாது எனும் அளவிற்கு நிலைமை சென்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன் கோலி அளித்த பேட்டியில் எந்த பிரச்சனையும் இல்லை என கூறினாலும், அடுத்த நாள் ரோஹித் சர்மா, நான் அணிக்காக ஆடவில்லை. நாட்டுக்காக ஆடுகிறேன் என பதிவிட்டு சூசகமாக மோதலை பற்றி கூறினார்.
கபில் தேவ் கருத்து
இந்த நிலையில், முன்னாள் கேப்டன் கபில் தேவ் இது குறித்து கருத்து கூறி இருக்கிறார். களத்துக்கு வெளியே கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், களத்தில் எப்படி ஆடுகிறார்கள் என்பது தான் முக்கியம். எல்லோரும் அதைத் தான் பார்க்க வேண்டும் என்றார்.
வெளியே கருத்து வேறுபாடு
களத்துக்கு வெளியே யோசிக்கும் முறை வித்தியாசமாக இருக்கலாம், அணுகுமுறை வித்தியாசமாக இருக்கலாம். ஆனால், விளையாடும் போது ஒரே ஒரு குறிக்கோள் தான் இருக்க முடியும். அது இந்தப் போட்டியில் எப்படி வெற்றி பெறுவது? என்பது தான். அது தான் முக்கியம் என்றார் கபில் தேவ்.
உள்ளே என்ன நடக்கிறது?
கருத்து வேறுபாடு இருக்கிறது என்பதற்காக அடுத்தவர் காலை வாருகிறார்கள் என்பதாக அர்த்தம் இல்லை என்றும் கூறி, இதெல்லாம் அணியில் சகஜம் தான் சுட்டிக் காட்டினார் கபில் தேவ்.
கவாஸ்கர் - கபில் தேவ்
எண்பதுகளில் கபில் தேவ் - சுனில் கவாஸ்கர் இடையேயும் பனிப் போர் நிலவியது. அப்போதும் கேப்டன் பதவி முதல் பல்வேறு விஷயங்களில் இருவருக்கு இடையேயும் பல கருத்து வேறுபாடுகள் நிலவியது. அதை சமாளித்து தான் கபில் தேவ் அப்போது விளையாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.