சென்னை: காலில் ஏற்பட்ட தசைப் பிடிப்பு காரணமாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன் கேதார் ஜாதவ், இந்தத் தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சிகிச்சைக்குப் பிறகு சில நாட்களில் திரும்ப வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஐபிஎல் சீசன் 11 நேற்று முன்தினம் துவங்கியது. நடிகர்கள் பிரபுதேவா, ஹிருத்திக் ரோஷனின் நடனம், நடிகை தமன்னா, ஜாக்குலின் பெர்னான்டஸ் நடனம் ஆகியவை அசத்தலாக இருந்தாலும், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் இடையேயான முதல் ஆட்டத்தை யாராலும் மறக்க முடியாது.
ஷேன் வாட்சன், ரெய்னா, டோணி, ஜடேஜா என்று பலரும் ஆட்டமிழக்கையில், கேதார் ஜாதவ் காயம் காரணமாக வெளியேறினார். ஒரு கட்டத்தில் சிஎஸ்கே தேறாது, தோல்விதான் என்று நினைத்தபோது, கடைசி ஓவர்களில் பிராவோவின் அதிரடி ஆட்டத்தில் இறங்கினார். 30 பந்துகளில் 7 சிக்சருடன் 68 ரன்கள் சேர்த்தார். 19வது ஓவரில் அவர் ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டது.
அப்போது காயம் காரணமாக வெளியேறிய கேதார் ஜாதவ் மீண்டும் விளைாட வந்தார். 14 ரன்கள் எடுத்திருந்த அவர், கடைசி ஓவரில், குட்டி பிராவோவாக மாறி, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடிக்க, சிஎஸ்கே அபாரமாக வென்றது.
அந்தப் போட்டியின்போது காலில் ஏற்பட்ட தசைப் பிடிப்புக்காக சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சிறிது காலம் விளையாட முடியாது என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். அதனால், இந்த சீசனில் அவர் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது. ஆனாலும், மனஉறுதியுடன், வலியைப் பொறுத்துக் கொண்டு கடைசி ஓவரில் விளையாடிய ஜாதவ், இந்த சீசனில் பைனலில் சிஎஸ்கே விளையாடும்போது கண்டிப்பாக இருப்பேன்ன்று கூறியுள்ளார். அதற்கு முன்பாகவே அணிக்கு திரும்புவதற்கு தயாராகி வருகிறார்.