கேகேஆர் வீரர்களுக்கு தொற்று
ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய போட்டி கேகேஆர் மற்றும் ஆர்சிபி இடையில் நடைபெறவிருந்த நிலையில், கேகேஆர் வீரர்கள் வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகியோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
மற்ற வீரர்களும் குவாரன்டைன்
இந்நிலையில் வருண் மற்றும் சந்தீப் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அணியின் மற்ற வீரர்களும் கடுமையான குவாரன்டைனில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அணியின் சிஇஓ வெங்கி மைசூர் தெரிவித்துள்ளார். 5 நாட்கள் இந்த குவாரன்டைன் தொடரும் என்பதால் வரும் 6ம் தேதி கொரோனா குறித்த அடுத்த ரிசல்ட் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
போட்டியில் பங்கேற்குமா கேகேஆர்?
இதையடுத்தே வரும் சனிக்கிழமை டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக மோதவுள்ள அடுத்த போட்டியில் கேகேஆர் அணி பங்கேற்குமா என்பது குறித்து தெரியவரும் என்றும் மைசூர் குறிப்பிட்டுள்ளார். ஐபிஎல் சுகாதாரத்துறையினர் அணியை கண்காணித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
வெங்கி மைசூர் ஆதங்கம்
அணியின் கடுமையான நேரம் இது என்று கூறியுள்ள வெங்கி மைசூர், சந்தீப் வாரியர் நல்ல உடல்நலத்துடன் உள்ளதாகவும் வருண் சக்ரவர்த்தி உடல்நிலையில் நேற்றைக்கு விட இன்று சற்று முன்னேற்றம் காணப்படுவதாகவும் மைசூர் மேலும் கூறினார்.
விசாரித்த ஷாருக்கான்
இதனிடையே அணியின் நிலவரம் குறித்து ஷாருக்கான் வீடியோ கால் மூலம் கேட்டறிந்ததாகவும் வெங்கி மைசூர் குறிப்பிட்டுள்ளார். வருண் மற்றும் சந்தீப் தனியாக வேறு ஒரு அடுக்கில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மற்ற வீரர்கள் மற்ற அடுக்கில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.