இரு இந்திய வீரர்கள் முன்னேற்றம்
ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதிய டி20 தொடரில் 2க்கு 1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து தற்போது வெளியிடப்பட்டுள்ள ஐசிசி டி20 போட்டிகளுக்கான புள்ளிகள் பட்டியலிலும் இந்திய வீரர்கள் இருவர் ஒரு இடம் முன்னேற்றமடைந்துள்ளனர். இந்த ஆண்டின் இறுதிப் பட்டியலாக இது கூறப்படுகிறது.
சிறப்பான கேஎல் ராகுல்
குறைந்த ஓவர்கள் வடிவத்தில் குறிப்பாக டி20 போட்டிகளில் கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடி தன்னுடைய பேட்டிங் மூலம் அனைவரையும் கவர்ந்து வருகிறார். கடந்த ஐபிஎல்லிலும் 700 ரன்களுக்கு மேல் இவர் குவித்துள்ளார். ஆனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்து முடிந்துள்ள டி20 தொடரில் 3 போட்டிகளிலும் சேர்த்து 81 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.
ராகுல், கோலி முன்னேற்றம்
இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள ஐசிசி டி20 போட்டிகளின் புள்ளிகள் பட்டியலில் ஒரு இடம் முன்னேறி 3வது இடத்திற்கு தாவியுள்ளார் கேஎல். ராகுல். 816 புள்ளிகளுடன் இவர் இந்த இடத்தை பிடித்துள்ளார். கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது போட்டியில் 81 ரன்களை குவித்த கேப்டன் விராட் கோலி ஒரு இடம் முன்னேறி 8வது இடத்தை பிடித்துள்ளார்.
19வது இடத்தில் ஷிகர் தவான்
இதனிடையே காயமடைந்துள்ள ரோகித் சர்மா புள்ளிகளில் பின்தங்கி 14வது இடத்தையும் ஷிகர் தவான் 19வது இடத்தையும் பிடித்துள்ளனர். டேவிட் மலன் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் டி20 வடிவத்தில் முதல் இரண்டு இடங்களை நிறைவு செய்துள்ளனர்.
வாஷிங்டன் சுந்தர் முதலிடம்
ஐசிசி டி20 வடிவத்தின் இந்திய பௌலர்களில் வாஷிங்டன் சுந்தர் முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் குறைவான விக்கெட்டுகளை எடுத்துள்ள போதிலும் பவர்ப்ளே ஓவர்களில் சிறப்பான பந்துவீச்சின் மூலம் இதை எட்டியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும்வகையில் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் 17வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.