மெல்போர்ன்: 3வது டெஸ்ட் போட்டியின் 3வது நாளான இன்று இந்தியா சற்று சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களைச் சோதிக்கும் வகையில் துணை கேப்டன் விராத் கோஹ்லியும், அஜிங்கியா ரஹானேவும் பிரமாதமாக ஆடி ஆளுக்கு ஒரு சதம் போட்டனர்.
ஆட்ட நேர முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 462 ரன்களை எடுத்திருந்தது. இது ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸை விட 68 ரன்கள் குறைவாகும்.
முன்னதாக ரஹானே மிகச் சிறப்பாக ஆடி 147 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மறு முனையில் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சு பாய்ச்சலை முறியடித்து நங்கூரமிட்டு நிலைத்து நின்று ஆடி 169 ரன்களைக் குவித்தார் கோஹ்லி. இருவரும் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 262 ரன்களைக் குவித்ததால் இந்தியா வலுவான நிலையை எட்ட முடிந்தது.
முன்னதாக கோஹ்லிக்கும், ஆஸ்திரலேிய வேகப் பந்து வீச்சாளர் மிட்சல் ஜான்சனுக்கும் இடையே வாய்ச் சண்டை மூண்டது. 83வது ஓவரின்போது சதம் அடிக்க கோஹ்லிக்கு 16 ரன்களே தேவை என்ற நிலையில் கோஹ்லியை நோக்கி ஜான்சன் வீசிய பந்தை அடித்தார் கோஹ்லி. அது ஜான்சனிடமே போனது. அதை தடுத்துப் பிடித்தவர், வேகமாக கோஹ்லியை நோக்கி பந்தை வீசினார். இதனால் கோபமானார் கோஹ்லி. ஜான்சனைப் பார்த்து கோபமாக பேசினார். பதிலுக்கு ஜான்சனும் பேசவே அந்த இடம் சூடானது.
இந்த டென்ஷனை வைத்து கோஹ்லியை அவுட்டாக்க கடுமையாக முயன்றார் ஜான்சன். ஆனால் முடியவில்லை. கோஹ்லி நிலைத்து நின்று விட்டார். தொர்ந்து பட்டாசாக விளையாடிய அவர் சதம் போட்டதோடு இல்லாமல் 169 ரன்களையும் தொட்ட பிறகே ஆட்டமிழந்தார்.
ஆஸ்திரேலிய தொடரில் கோஹ்லி அடித்துள்ள 3வது சதமாகம் இது.