டெல்லி: பல்வேறு தரப்பினரும் இந்திய அணியின் பேட்டிங்கை விமர்சித்து வரும் நிலையில், எங்கள் மீதான நம்பிக்கையை இழந்து விடாதீர்கள் என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. முதல் டெஸ்டில் 31 ரன்களிலும், இரண்டாவது டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்களிலும் இங்கிலாந்து வென்றுள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் வரும் 18ம் தேதி துவங்குகிறது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 107 ரன்கள் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 130 ரன்களுக்கு இந்திய அணி ஆட்டமிழந்தது.
இந்திய அணியின் மோசமான பேட்டிங் குறித்து, பல்வேறு தரப்பினர் அதிருப்தியும், விமர்சனமும் செய்தனர். முன்னாள் வீரர்கள் பலரும், போராடாமல் இந்திய அணி தோல்வி அடைந்தது என்று கடுமையாக கண்டனம் தெரிவித்தனர்.
இந்த தோல்வி குறித்து விளக்கம் அளிக்கும்படி கேப்டன் கோஹ்லி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் பிசிசிஐ கேட்டுள்ளது.
இந்த நிலையில், டுவிட்டரில் ஒரு உருக்கமான பதிவை கோஹ்லி வெளியிட்டுள்ளார். அதில், சில நேரங்களில் நாம் வெல்கிறோம். மற்ற நேரங்களில் பாடம் கற்கிறோம். எங்கள் மீதான நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். உங்கள் மீதான நம்பிக்கையையும் நாங்கள் இழக்க மாட்டோம். இனி முன்னேற்றத்தை காட்டுவோம் என்று உருக்கமாக கோஹ்லி கூறியுள்ளார்.
லார்ட்ஸ் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அடைந்த தோல்விதான், கேப்டனாக விராட் கோஹ்லிக்கு கிடைத்த மிகப் பெரிய தோல்வியாகும்.