சர்ச்சைகளுக்கு உள்ளான தோனி
கடந்த உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியுற்று வெளியேறிய நிலையில், அதையடுத்து சர்வதேச போட்டிகளில் விளையாடுவதில் இருந்து முன்னாள் கேப்டன் தோனி விலகியுள்ளார். இதனால் கடுமையான சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.
ஐபிஎல் 2020ல் விளையாட்டு
தோனி ஓய்வை அறிவிப்பார் என்பது உள்ளிட்ட பல்வேறு அனுமானங்கள் அவர் குறித்து தொடர்ந்து வெளிவந்தவண்ணம் உள்ளது. இந்நிலையில் அவர் ஐபிஎல் 2020ல் விளையாடவுள்ளார்.
ஊடகங்களிடம் கூறிய தோனி
இதனிடையே கடந்த மாதத்தில் தன்னுடைய பயிற்சியை தோனி மீண்டும் ஆரம்பித்ததால், அவர் மீண்டும் அணிக்காக விளையாட உள்ளதாக கூறப்பட்டது. இதுகுறித்து முதல்முறையாக வாய்திறந்த தோனி, வரும் ஜனவரி மாதம் வரை எந்த கேள்வியும் கேட்கவேண்டாம் என்று ஊடகங்களிடம் கேட்டுக் கொண்டார்.
"ஐபிஎல் வரை காத்திருங்கள்"
இந்நிலையில், இந்த விவகாரத்தில் எந்தவிதமான அனுமானங்களையும் செய்யாமல், ஐபிஎல் வரை காத்திருங்கள் என்று கடந்த மாதத்தில் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்திருந்தார்.
சாதனையாளர் என புகழாரம்
இந்நிலையில் தோனி குறித்து மீண்டும் ரவிசாஸ்திரி தற்போது பேசியுள்ளார். தோனி ஒரு சாதனையாளர் என்று குறிப்பிட்டுள்ள ரவி சாஸ்திரி, அவர் ஐபிஎல் 2020 போட்டிகளில் பங்கேற்க உள்ளதையும் தெரிவித்துள்ளார்.
மனம் திறந்த ரவி சாஸ்திரி
ஒரு சாதனையாளராக திகழும் எம்.எஸ். தோனி இந்திய அணியில் தன்னை திணித்துக் கொள்ள முடியாது என்று ரவி சாஸ்திரி குறிப்பிட்டுள்ளார். தோனி தற்போது ஓய்வை விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தோனி குறித்து ரவி சாஸ்திரி
ஐபிஎல் 2020ல் விளையாடவுள்ள தோனி, அதன்பிறகு இந்திய அணிக்காக தான் விளையாட வேண்டுமென்று நினைத்தால் கண்டிப்பாக விளையாடுவார் என்றும் இதுகுறித்து யூகங்களை செய்ய வேண்டாம் என்றும் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.