9 அணியாக அதிகரிப்பு
தற்போது 8 அணிகளாக உள்ள ஐபிஎல்லில் மேலும் ஒரு அணியை ஐபிஎல் 2021 சீசனில் கொண்டுவர பிசிசிஐ திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. இதற்கான டெண்டர் தீபாவளியை தொடர்ந்து விடப்படும் என்றும் கூறப்பட்டது. இதேபோல வரும் 2023 சீசனில் இந்த எண்ணிக்கையை 10ஆக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வெளிகொணரும் முயற்சி
இந்நிலையில் நாட்டில் வெளியில் வராத பல கிரிக்கெட் திறமைகள் உள்ளதாகவும் அவற்றை வெளிக்கொண்டுவர திட்டமிடப்பட்டு வருவதாகவும் தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான சைமன் ஹக்குடன் இணைந்து அவர் எழுதியுள்ள 'எ நியூ இன்னிங்ஸ்' புத்தகத்தின் வெளியீட்டு விழா ஆன்லைன் மூலம் நடைபெற்றது. அதில் பேசிய ராகுல் இதனை குறிப்பிட்டுள்ளார்.
புதிய திறமைகள்
ஐபிஎல் அணிகளை அதிகரிப்பதன்மூலம் புதிய முகங்கள் புதிய திறமைகளுடன் வெளியில் வர வாய்ப்புள்ளதாக டிராவிட் தெரிவித்துள்ளார். முன்பெல்லாம் ரஞ்சி போன்றவற்றில் வீரர்களின் திறமை வெளியில் வருவதற்கு மாநில கிரிக்கெட் மையங்களை மட்டுமே நம்பியிருக்க வேண்டியிருந்தது என்று ராகுல் தெரிவித்துள்ளார்.
சமரசம் அற்ற திறமைகள்
ஆனால் தற்போது ஹரியானா போன்ற மாநிலங்களில் இருந்தும் சிறப்பான யுஸ்வேந்திர சஹல், அமித் மிஸ்ரா, ஜெய்ந்த் யாதவ் மற்றும் டேவாட்டியா போன்ற ஸ்பின்னர்களுக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருவதாகவும் ராகுல் தெரிவித்துள்ளார். தரத்தில் குறையாத அளவில் வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சாத்தியம் தான்
இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளரில் ஒருவரான மனோஜ் பேடேல் ஐபிஎல்லில் 9 அணிகளை உருவாக்குவது சாத்தியம்தான் என்று கூறியுள்ளார். ஆனால் அணி அதிகரிக்கப்படும்போது மதியநேர போட்டிகளும் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் தொடரின் தரத்தில் எந்தவிதமான சமரசமும் செய்யப்படக் கூடாது அவர் கூறியுள்ளார்.