ஏன் தாதா.. இதையெல்லாம் என் கிட்ட சொல்ல வேண்டாமா.. அலுத்துக் கொண்ட மமதா பானர்ஜி
கொல்கத்தா: கொரோனா பீதி காரணமாக இந்தியா -தென்னாப்பிரிக்கா இடையிலான ஒரு நாள் போட்டியை ரத்து செய்தது குறித்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
Recommended Video
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இதுகுறித்து தன்னிடம் தெரிவித்திருக்க வேண்டும் என்றும் மமதா பானர்ஜி கூறியுள்ளார். மார்ச் 29ம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் தொடர் தற்போது கொரோனா பீதி காரணமாக ஏப்ரல் 15ம் தேதிக்கு தள்ளிப் போய் விட்டது.
அதேபோல இந்தியா -தென்னாப்பிரிக்கா இடையிலான ஒரு நாள் போட்டித் தொடரும் ரத்து செய்யப்பட்டு விட்டது. அதில் ஒரு போட்டி கொல்கத்தாவில் நடைபெறவிருந்தது. இந்தப் போட்டி ரத்து குறித்து தற்போது மமதா அதிருப்தி தெரிவித்துள்ளார்.

கங்குலி என்னிடம் சொல்லியிருக்கணும்
இதுகுறித்து அவர் கூறுகையில் போட்டி ரத்து குறித்த முடிவை என்னுடனும் கலந்து பேசி பிசிசிஐ முடிவு எடுத்திருக்க வேண்டும். தன்னிச்சையாக எடுத்திருப்பது ஏமாற்றம் அளித்துள்ளது. என்னிடம் கங்குலி பேசியிருக்க வேண்டும். மாநில அரசுடன் இதுகுறித்து பேசியிருக்க வேண்டாமா. பிறகுதானே முடிவெடுத்திருக்க வேண்டும். அதை ஏன் கங்குலி செய்யவில்லை என்று கேட்டுள்ளார்.

இதில் மட்டும் தப்பு செய்து விட்டார்
கங்குலி எல்லாமே சரியாக செய்கிறார். ஆனால் இதில் அவர் செய்தது தவறு. அதைத் தவிர வேறு சொல்வதற்கு ஒன்றுமில்லை. கொல்கத்தாவில் போட்டி நடைபெறும் என்று தெரிவித்ததால் காவல்துறையினரும் நிறைய ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தனர். குறைந்தது அவர்களுக்காவது கங்குலி முன்கூட்டியே தகவல் சொல்லியிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் மமதா.

கங்குலி செயல் ஏமாற்றமாக இருக்கிறது
தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், போலீஸ் கமிஷனர் என அரசில் நிறையப் பேர் உள்ளனர். யாராவது ஒருவரிடம் அவர்கள் தகவல் சொல்லியிருக்கலாம். ஆனால் எல்லோரையும் அவர்கள் புறக்கணித்துள்ளனர். அதுதான் ஏன் என்று தெரியவில்லை. எதுவுமே சொல்லாமல் போட்டியை நிறுத்தியுள்ளனர். இது ஏமாற்றம் தருகிறது என்றும் மமதா புலம்பியுள்ளார்.

ரத்தானது இரு போட்டிகள்
முதல் போட்டி தர்மசாலாவில் நடைபெறவிருந்தது. ஆனால் மழை காரணமாக போட்டி நடைபெறாமல் ரத்தானது. அடுத்த இரண்டு போட்டிகள் கொல்கத்தா மற்றும் லக்னோவில் நடைபெறவிருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இரு போட்டிகளையும் பிசிசிஐ ரத்து செய்து விட்டது நினைவிருக்கலாம். இது தொடர்பாகத்தான் தற்போது மமதா புலம்பியுள்ளார்.


Click it and Unblock the Notifications