"நேரம்" சரியில்லை... அமெரிக்காவில் நடத்தத் திட்டமிட்ட மினி ஐபிஎல் போட்டிகள் திடீர் நிறுத்தி வைப்பு!
லாடர்ஹில், புளோரிடா, அமெரிக்கா: இந்திய நேரமும், அமெரிக்க நேரமும் இடிப்பதால் அமெரிக்காவில் நடத்தத் திட்டமிட்டிருந்த மினி ஐபிஎல் போட்டித் தொடரை இந்திய கிரிக்கெட் வாரியம் நிறுத்தி வைத்துள்ளது.
இந்திய நேரமும், அமெரிக்க நேரமும் அப்படியே நேர் மாறாக இருக்கும். இந்தியாவில் பகல் என்றால் அது அமெரிக்காவில் இரவாகும். இதுதான் தற்போது போட்டித் தொடரை நிறுத்தி வைக்க முக்கியக் காரணமாகும்.
என்னதான் அமெரிக்காவிலும் கிரிக்கெட்டைப் பரப்ப இந்தப் போட்டியைப் பயன்படுத்தப் போவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் கூறியிருந்தாலும் கூட உண்மையான நோக்கம் வர்த்தகம்தான். மற்றபடி சமூக சேவை நோக்கமெல்லாம் கிடையவே கிடையாது. இந்திய ரசிகர்களையும், டிவி ஒளிபரப்பின் மூலம் கிடைக்கும் வருவாயும்தான் பிசிசிஐக்கு முக்கியம்.
தற்போது கூட அதை கருத்தில் கொண்டுதான் அமெரிக்க மினி ஐபிஎல் போட்டித் தொடரை நிறுத்தி வைத்துள்ளதாக பிசிசிஐ பச்சையாகவே கூறி விட்டது.

நிறுத்தி வைப்பு
இதுகுறித்து பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர் கூறுகையில், அமெரிக்காவில் நடத்தத் திட்டமிட்டிருந்த டி20 மினி ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலும் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் நோக்கில்தான் இந்தத் தொடர் திட்டமிடப்பட்டது.

நேரம் சரியில்லை
ஆனால் அமெரிக்க நேரமும், இந்திய நேரமும் மாறுபடுவது பெரும் இடையூறாக மாறியுள்ளது. ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் இரவு 7 மணி முதல் இரவு 11.30 மணி வரை பார்ப்பார்கள். ஆனால் அமெரிக்காவில் போட்டிகளை நடத்தினால் அந்த நேரம் முற்றிலும் மாறுபடுகிறது.

ஈஸ்ட் கோஸ்ட்
அமெரிக்காவின் ஈஸ்ட் கோஸ்ட் பகுதியில் இந்திய நேரத்திற்கு கிட்டத்தட்ட சமமான அளவில் இருக்கும் என்கிறார்கள். அதுகுறித்துப் பரிசீலித்து வருகிறோம். அது சரிப்பட்டு வரும்பட்சத்தில் முடிவுகள் அதற்கேற்ப எடுக்கப்படும்.

வர்த்தகம் பாதிக்கும்
அமெரிக்காவில் பகலில் போட்டியை நடத்தினால் இந்தியாவில் ரசிகர்களால் சரிவர பார்க்க முடியாது. நமக்கு ரசிகர்கள் முக்கியம், டிவி ஒளிபரப்பு முக்கியம். எனவே அதை புறக்கணித்து விட்டு போட்டியை நடத்த முடியாது.

சாதகமான ஊரைத் தேடுகிறோம்
எனவே அமெரிக்காவில் எந்த மாகாணத்தில் போட்டியை நடத்தினால் சாதகமாக இருக்கும் என்பது குறித்து ஆராயப்படும். அதுவரை போட்டித் தொடர் நிறுத்தி வைக்கப்படுகிறது என்றார் தாக்கூர்.

வருடா வருடம்
வருடா வருடம் செப்டம்பர் மாதத்தில் மினி ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படும் என்று முன்பு பிசிசிஐ அறிவித்திருந்தது. இந்தத் தொடர் அமெரிக்காவில் நடத்தப்படும் என்றும் அது கூறியிருந்தது. தற்போது நேர குழப்பம் காரணமாக தொடர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications