நடிக்க மறுத்தவர்
34 வயதாகும், கேப்டன் மிதாலி ராஜ், சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தும், நிராகரித்தார். வழக்கமான கிரிக்கெட் தொடர்பான கேள்விகளைத் தவிர, அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து, பி.பி.சி.,க்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், மிதாலி, வெளிப்படையாக கூறியவை:
பலத்தை நிரூபித்திருக்கலாம்
உலகக் கோப்பை பெண்கள் இறுதிப் போட்டியில் வெற்றிக்கு மிக நெருக்கமாக சென்றும் தோல்வியடைந்தது மிகவும் வருத்தமாக இருந்தது. வென்றிருந்தால், இந்திய அணியின் பலத்தை நிரூபிக்கும் சந்தர்ப்பமாக அது அமைந்திருக்கும்.
இளம் அணி
இங்கிலாந்து அணியைப் போல் அல்லாமல், இந்த இளம் அணி முதல் முறையாக நாம், இறுதிப் போட்டியில் விளையாடியது. இருந்தாலும், அவ்வளவு எளிதாக இங்கிலாந்திடம் தோற்கவில்லை என்று ஆறுதலான விஷயம்.
நான் தமிழச்சி
திரைப்படங்களை அதிகம் பார்ப்பதில்லை. தமிழ், தெலுங்கு படங்களை பார்க்க மாட்டேன். இந்திப் படங்களை பார்ப்பேன். என்னுடைய முன்னோர்கள் பாண்டிச்சேரியை சேர்ந்தவர்கள். ஆனால், என்னுடைய பெற்றோர்கள் ஹைதராபாத்தில் வசித்து வருகின்றனர். தந்தை துரைராஜ், விமானப் படையில் பணியாற்றினார். தாய் லீலா ராஜ். தமிழ் என்னுடைய தாய்மொழி. ஆனால், நான் ராஜஸ்தானில் பிறந்தேன்.
திருமணம் புனிதமானது
திருமணத்தை மிகவும் புனிதமாக கருதுகிறேன். உறவுகளை வளர்ப்பதற்கு நேரம் தேவை. என்னையும், என்னுடைய சாதனைகளையும் மதிக்கத் தெரிந்த ஒருவரைக் கண்டால் திருமணம் செய்வது குறித்து முடிவு செய்வேன். அதுவரை விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே நோக்கமாக இருக்கும்.
இவ்வாறு மிதாலி கூறினார்.
திருமணத்துக்கு தன்னுடைய கன்டிஷனை மிதாலி கூறிவிட்டார். இதற்கு தயாராக உள்ளவர்கள், உடனடியாக விண்ணப்பிக்கலாம்.