சரியா பயிற்சி கொடுக்காம என்ன பண்றீங்க?... பேட்ஸ்மேன்கள் சொதப்ப அவர்களும் காரணம் என்கிறார் அசாருதீன்
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன், இங்கிலாந்தில், இந்தியா தோற்றது குறித்த தன் விமர்சனத்தை வைத்துள்ளார். இந்தியா, நான்காம் டெஸ்டில் 60 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இங்கிலாந்து தொடரை 1-3 என இழந்துள்ளது.
தொடர் முழுவதும், இந்திய பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சொதப்பினார்கள். பந்துவீச்சாளர்கள் நன்றாகவே செயல்பட்டாலும், இந்தியாவின் ஆயுதமாக எப்போதும் இருக்கும் பேட்டிங் மிக பரிதாபமான நிலையை எட்டியது.
பேட்டிங்கில் இந்தியா தொடர்ந்து சரியாக ஆடாதது குறித்து அசாருதீன் தன் கருத்துகளை கூறி இருக்கிறார். இந்திய அணியின் பயிற்சியாளர்கள் மற்றும் உதவி பயிற்சியாளர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என கேள்வி எழுப்பி உள்ளார் அசாருதீன்.

பயிற்சியாளர்கள் என்ன செய்கிறார்கள்?
அவர் இது பற்றி விரிவாக கூறுகையில், "நாம் இந்த தொடரை இழக்கக் காரணம், ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்தது தான். பயிற்சி உதவியாளர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்? நுணுக்கமாக சொல்ல வேண்டுமென்றால், நமது பேட்ஸ்மேன்களுக்கு நகரும் பந்துகளில் அடிக்க முடியவில்லை என்பதால் அது பற்றிய தேவை இருந்தது" என்றார்.

தவான், ராகுல் ரன் குவிக்கவில்லை
மேலும், "நாம் கோலியை மட்டுமே சார்ந்து இருக்க முடியாது. துவக்க ஆட்டக்காரர்களான தவான், ராகுல் கூட ரன் எடுக்கவில்லை. நடு வரிசை வீரர்கள் அதிக வேலைப் பளு அளிக்கப்பட்டது. நான்காம் போட்டியில், புஜாரா சதம் அடித்த பின் நாம் நூறு ரன்களாவது முன்னிலையில் இருந்து இருக்க வேண்டும்" என தெரிவித்தார்.

சிறந்த பந்துவீச்சு தாக்குதல்
இந்திய அணியின் பந்துவீச்சு பற்றி பேசிய அவர், "இதை விட சிறப்பாக செய்திருக்க முடியாது. இந்த தொடரை வெல்லும் அளவுக்கு சிறந்த பந்துவீச்சு தாக்குதல் நம்மிடம் இருந்தது. அனைத்து போட்டிகளிலும் 20 விக்கெட்கள் எடுத்தார்கள். எதிரணியை மடக்க நம் அணிக்கு வாய்ப்பு அளித்தார்கள்" என பாராட்டியுள்ளார்.

வீரர்கள் தேர்வில் குழப்பம்
இந்திய அணி வீரர்கள் தேர்வில் கூட அதிகம் குழப்பம் அடைந்தது. முதல் இரண்டு போட்டிகளில் புஜாரா அணியில் சேர்க்கப்படவில்லை. அதே போல, வேகப்பந்து வீச்சு ஆடுகளத்தில், இரண்டு சுழல் பந்துவீச்சாளர்கள் கொண்டு களம் இறங்கியது இந்தியா.

எல்லோரும் சேர்ந்து விளையாடணும்
அது குறித்து பேசிய அசாருதீன், "என்ன நினைத்து அணியில் மாற்றம் செய்தார்கள் என்பது தெரியாது என்பதால், அது பிழையானது என என்னால் கூற முடியாது. மொத்த பேட்டிங்கும் சவாலுக்கு சரியாக பதிலளிக்கவில்லை. கோலி மட்டுமே ஆடினார். இது அணி விளையாட்டு. அனைவரும் கேப்டனுக்கு உதவ வேண்டும்" என முடித்தார்.


Click it and Unblock the Notifications