“எந்த தவறுமே நடக்கவில்லை” கிரிக்கெட் ரசிகர்கள் மீது போலீசாரின் கோர தடியடி.. அசாருதீன் தந்த விளக்கம்
நாக்பூர்: கிரிக்கெட் ரசிகர்கள் மீதான போலீஸ் தடியடி குறித்து ஐதராபாத் கிரிக்கெட் வாரிய தலைவர் முகமது அசாருதீன் முதல் முறையாக வாய்திறந்துள்ளார்.
ஐதராபாத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் மீது போலீசார் நடத்திய கோர தாக்குதல் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
டிக்கெட் விற்பனைக்காக காத்துக்கொண்டிருந்தவர்களை கட்டுப்படுத்த முடியாமல் தாக்குதல் நடத்தப்பட்டன.

போலீசார் தடியடி
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டி ஐதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் செப்.25ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கியது, அதிகாலை முதலே கூட்டம் குவிந்தது. அப்போது ஏற்பட்ட பிரச்சினையில் போலீசார் தடியடி நடத்த 20க்கும் மேற்பட்ட ரசிகர்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

குவியும் விமர்சனங்கள்
ஆன்லைனில் டிக்கெட் விற்பனையை முதலில் நடத்தாமல் ஆஃப்லைனில் நடத்தியது ஏன்? தாமதமாக விற்பனையை தொடங்கியது என ஐதராபாத் கிரிக்கெட் கவுன்சில் சரியான ஏற்பாடுகளை செய்யவில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.மேலும் அதன் தலைவர் அசாருதீன் மீதும் பல விமர்சனங்கள் குவிந்தன.

அசாருதீனின் விளக்கம்
இந்நிலையில் அசாருதீன் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், ஒரு அறையில் அமர்ந்துக்கொண்டு போட்டியை நடத்துவது சாதாரண காரியம் அல்ல. டிக்கெட் விற்பனை குறித்த முழு அறிக்கையையும் விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கொடுத்துள்ளேன். எது சரி, எது தவறு என்பது குறித்து அவரே கூறுவார்.

தவறே நடக்கவில்லை
நாங்கள் எதையுமே தவறாக செய்யவில்லை. காயம்பட்ட ரசிகர்களுடன் தான் இன்று காலை முழுவதும் நாங்கள் இருந்தோம். அவர்களை ஐதராபாத் வாரியம் கவனித்துக்கொள்ளும். 3 வருட இடைவெளிக்கு பிறகு போட்டிகள் நடைபெறுவதால் ரசிகர்கள் குவியத்தான் செய்வார்கள். ஆனால் டிக்கெட் விற்பனை குறித்து முழு விவரங்களையும் கூறிவிட்டு தான் செய்தோம் என அசாருதீன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications