ஐபிஎல் போட்டியின் போது அஸ்வின் சொல்லிக்கொடுத்த பந்துவீச்சு வித்தையை இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பயன்படுத்துவேன் என்று ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் முஜீப்புர் ரஹ்மான் கூறியுள்ளார்.
ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் முஜீப்புர் ரஹ்மான் ஐபிஎல் போட்டியின்போது அஸ்வின் கற்றுக்கொடுத்த பந்துவீச்சு வித்தையை இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் காட்டுவேன் என்று கூறியுள்ளார்.
ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டியில் விளையாடும் அந்தஸ்து பெற்றபின் தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவுடன் விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் போட்டி நாளை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்க உள்ளது.
இந்நிலையில், பதினேழு வயதேயான ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் முஜீப்புர் ரஹ்மான் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினிடம் கற்ற பந்துவீச்சு வித்தையை இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் காட்டுவேன் என்று கூறியுள்ளார்.
நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முஜீப்புர் ரஹ்மான் இடம்பெற்றிருந்தார். அந்த அணியின் கேப்டனாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் செயல்பட்டார். முஜீப் 11 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி சராசரியாக 6.99 ரன்கள் கொடுத்து 14 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
முஜீப்புர் ரஹ்மான் செய்தி இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "ஐபிஎல் போட்டியின்போது அஸ்வின் நான் ரொம்ப நல்லா பந்துவீசுவதாகக் கூறினார். நீங்க ரொம்ப சிக்கனமா பந்துவீசுகிறீர்கள் என்று அஸ்வின் கூறினார். அதோடு அவர் பந்துவீசும்போது எந்த பகுதிகளில் பந்து வீச வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தார். அஸ்வினிடம் கற்றுக்கொண்ட பந்துவீச்சு வித்தையை இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பயன்படுத்துவேன். இப்படி சொல்லிக்கொடுப்பது ஒரு கேப்டன் இயல்பாக செய்வதுதான்" என்று கூறியுள்ளார்.
முஜீப் மேலும் கூறுகையில், "ஐபிஎல் போட்டியிலிருந்தே பெங்களூருவில் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு நான் ஏற்கெனவே தயாராகிவிட்டேன். நான் இதுநாள்வரை உள்நாட்டு முதல்தரப் போட்டிகளில் விளையாடாவிட்டாலும் கூட 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் விளையாடி இருக்கிறேன். இதனால், பயமின்றி விளையாடுவேன். டெஸ்ட் போட்டி குறித்து எந்தவிதமான அச்சமும் இல்லை. நான் என்னுடைய மூத்த வீரர்கள் ரஷீத்கான், முஹமது நபி ஆகியோரிடமும் கற்றுக்கொள்வேன்." என்/று கூறியுள்ளார்.