சென்னை: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி வாய்ப்பை இழந்தது. இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய சிஎஸ்கே கேப்டன் டோணி, புதிய ஹாட்ரிக் கிடைத்துள்ளது.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை 12 ஆட்டங்கள் முடிந்துள்ளன. ஒவ்வொரு அணியும் தலா 3 ஆட்டங்களில் விளையாடியுள்ளன.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக மொகாலியில் நேற்று நடந்த ஆட்டத்தில் வெற்றி வாய்ப்பை 4 ரன்களில் சிஎஸ்கே இழந்தது. பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் சேர்த்தது. சிஎஸ்கே 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து, 193 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே கேப்டன், முதுகு வலியுடன் விளையாடி, 79 ரன்கள் எடுத்தார். மிகச் சிறந்த பினிஷர் என்ற பெயர் பெற்ற டோணியால், நேற்றைய போட்டியில் வெற்றியை எட்ட முடியவில்லை.
ஐபிஎல்லில் இரண்டாவதாக பேட்டிங் செய்யும்போது, டோணி ஆட்டமிழக்காமல் கடைசி வரை நின்று, அந்த ஆட்டங்களில் சிஎஸ்கே தோல்வியடைவது இது மூன்றாவது முறையாகும். 2013ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டோணி ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் எடுத்தார். 2014ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 42 ரன்கள் எடுத்தார். நேற்றைய ஆட்டத்தில், ஆட்டமிழக்காமல் 79 ரன்கள் குவித்தார்.
அதே நேரத்தில், சேசிங் செய்யும்போது, டோணி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த 15 போட்டிகளில் சிஎஸ்கே வென்றுள்ளது.