தள்ளி வைக்கப்பட்ட ஐபிஎல்
2020 ஐபிஎல் தொடர் நீண்ட போராட்டத்துக்குப் பின் நடக்க உள்ளது, கடந்த மார்ச் மாதமே துவங்க வேண்டிய தொடர் கொரோனா வைரஸ் பாதிப்பால் தடைபட்டது. அதனால், பல ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்படும் அபாயத்தில் இருந்தது பிசிசிஐ.
பிசிசிஐ முடிவு
இந்த நிலையில், ஐசிசி 2௦20 டி20 உலகக்கோப்பை தொடரை தள்ளி வைத்ததால் அதே தேதிகளில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த முறை இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடக்காது என பிசிசிஐ வட்டாரம் கூறி உள்ளது.
ஐபிஎல் எங்கே?
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் பாதுகாப்பான முறையில் நடைபெறும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்பார்களா? என்ற கேள்வியும் உள்ளது. அது குறித்து நியூசிலாந்து கிரிக்கெட் அமைப்பிடம் பிடிஐ செய்தி நிறுவனம் கேள்வி எழுப்பியது.
அனுமதி
நியூசிலாந்து கிரிக்கெட் அமைப்பு அளித்த பதிலில் தங்கள் அணியை சேர்ந்த ஆறு வீரர்களுக்கும் ஐபிஎல் தொடரில் ஆட அனுமதி அளித்து இருப்பதாகவும், அதே சமயம் தற்போதைய சூழலில் உடல்நல பாதுகாப்பை அவர்களே பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறி உள்ளது.
அவர்களே பொறுப்பு
தங்களால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு செய்ய தயாராக இருப்பதாகவும், எனினும், அவர்களே தங்கள் உடல்நலத்துக்கு பொறுப்பு என்றும் கூறி உள்ளது. அந்த ஆறு வீரர்களில் முக்கியமானவர் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன்.
ஆறு வீரர்கள் யார்?
கேன் வில்லியம்சன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்றுள்ளார். ஜிம்மி நீஷம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிலும், லாக்கி பெர்குசன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலும் இடம் பெற்றுள்ளனர். மிட்செல் சான்ட்னர் சிஎஸ்கே அணியில் இடம் பெற்றுள்ளார்.
கிரிக்கெட் தொடர் இல்லை
மிட்செல் மெக்கிளினகன் மற்றும் ட்ரென்ட் பவுல்ட் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளனர். நியூசிலாந்து அணி செப்டம்பர் - நவம்பரில் எந்த கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்காத நிலையில் தங்கள் வீரர்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது.