உடலுறவு
இங்கிலாந்தின் அறிமுக வீரர் ஓலே ராபின்சன், 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் தனது ட்விட்டரில் இனவெறி மற்றும் பாலியல் குறித்து செய்த டிவீட்ஸ் சர்ச்சையில் சிக்கியது. முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்ற முதல் நாளிலேயே, இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. அவர் தனது ட்வீட் ஒன்றில், "வீடியோ கேம்ஸ் விளையாடும் பெண்கள், உண்மையில் கேம்ஸ் விளையாடாத பெண்களை விட அதிக உடலுறவு கொள்கிறார்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறார். இதுபோல், இனவெறி குறித்தும் ட்வீட் செய்திருக்கிறார்.
வெட்கப்படுகிறேன்
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் பதிவிட்ட ட்வீட் இப்போது சர்ச்சையாக, அதற்கு ராபின்சன் பகிரங்க மன்னிப்பு கேட்டிருந்தார். டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவடைந்த பின்னர் அவர் வருத்தம் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர், எனது தொழில் வாழ்க்கையின் இந்த மிகப் பெரிய நாளில், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் பதிவிட்ட இனவெறி மற்றும் பாலியல் ட்வீட்களைப் பற்றி நான் வெட்கப்படுகிறேன். நான் இனவெறியாளன் அல்ல, நான் sexist அல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனது செயல்களுக்கு நான் மிகவும் வருந்துகிறேன், இதுபோன்ற கருத்துக்களை தெரிவிப்பதில் நான் வெட்கப்படுகிறேன். நான் சிந்தனையற்றவனாகவும் பொறுப்பற்றவனாகவும் இருந்தேன், அந்த நேரத்தில் எனது மனநிலையை மீறி நான் செய்த செயல்கள் மன்னிக்க முடியாதவை.
முதிர்ச்சி
அந்தக் காலத்திலிருந்து நான் ஒரு நபராக முதிர்ச்சியடைந்தேன். எனது ட்வீட்டுகளுக்கு முழுமையாக வருந்துகிறேன். இன்று களத்தில் நான் மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் எனது அறிமுக டெஸ்ட் போட்டி அறிமுகத்தில் எனது பெருமை பற்றியதாக இருக்க வேண்டும், ஆனால் கடந்த காலத்தில் எனது சிந்தனையற்ற நடத்தை இதைக் கெடுத்துவிட்டது. கடந்த சில ஆண்டுகளில், எனது வாழ்க்கையை மாற்ற நான் கடுமையாக உழைத்தேன். நான் முதிர்ச்சியடைந்தேன். நான் புண்படுத்திய அனைவரிடமும், எனது அணி வீரர்கள் மற்றும் ஒட்டுமொத்த விளையாட்டிற்கும் நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.
புதிய வீரர்கள்
இந்த சூழலில், இங்கிலாந்து பேட்டிங் பயிற்சியாளர் கிரஹாம் தோர்ப் கூறுகையில், "எதிர்காலத்தில் இனிமேல் ராபின்சன் சம்பவம் போல் நிகழாமல் இருக்க, புதிதாக அணியில் இணையும் வீரர்களின் கடந்த கால சமூக தள டிவீட்ஸ், மெசேஜஸ் குறித்து ஆய்வு செய்யப்படும். ராபின்சன் தனது செயல் குறித்து இங்கிலாந்து அணிக்கும், இந்த உலகிற்கும் மன்னிப்பு கேட்க வேண்டிய வேண்டியுள்ளது" என்று கூறியிருந்தார். இதனால் அவருக்கு மீண்டும் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
தண்டனை
அதன்படி, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அவரை கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் கூறியுள்ளது. முதல் போட்டியில் அவர் தனது அபாரமான ஆல் ரவுண்டர் பெர்ஃபாமன்ஸை நிரூபித்து இருந்தாலும், இப்போது அவரது கிரிக்கெட் வாழ்க்கையே அவரது தனிப்பட்ட குணத்தால் தடைப்பட்டுவிட்டது.