கேகேஆர் -பஞ்சாப் கிங்ஸ்
ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய கேகேஆர் -பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பௌலிங் செய்த கேகேஆர் பௌலர் பாட் கமின்ஸ் 3 ஓவர்களை மட்டுமே போட்டு 31 ரன்களை கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணியின் முக்கியமான கேஎல் ராகுல் மற்றும் ரவி பிஸ்னோய் விக்கெட்டுகளை அவர் வீழ்த்தனார்.
சிறப்பான பங்களிப்பு
முக்கியமாக கேஎல் ராகுல் விக்கெட்டை வீழ்த்தி அந்த அணியின் விக்கெட் கவுண்ட்டை துவக்கி வைத்தார். மேலும் அவரது விக்கெட்டை வீழ்த்தியதன்மூலம் பஞ்சாப் அணியின் ஸ்கோர் உயராமல் பார்த்துக் கொண்டார். இந்நிலையில் தான் மைதானத்தில் மட்டுமின்றி சமூகத்திற்கும் மிகவும் சிறப்பான பங்களிப்பை அளிப்பேன் என்று தனது செய்கையின் மூலம் அவர் நிரூபித்துள்ளார்.
50,000 டாலர்கள் நிதியுதவி
இந்நிலையில் பிரதமர் கேர்ஸ் திட்டத்திற்கு அவர் 50,000 டாலர் நிதியுதவி அளித்துள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா பரவலையடுத்து துவங்கப்பட்ட இந்த திட்டத்தில் கமின்ஸ் அளித்துள்ள இந்த நிதியுதவி குறிப்பாக மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வாங்குவதற்காக அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சக வீரர்களுக்கு அழைப்பு
மேலும் இந்தியாவிற்கு தான் கடந்த சில வருடங்களாக வந்து செல்வதாகவும் இங்குள்ள மக்கள் மிகவும் அன்பானவர்கள் என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் தான் இந்த நிதியுதவியை துவக்கி வைத்துள்ளதாகவும் ஐபிஎல்லின் சக வீரர்கள் இதை தொடர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
வெளிச்சத்தை கொண்டுவர முடியும்
தான் அளித்துள்ள தொகை இந்த சூழலில் போதுமானதல்ல என்று கூறியுள்ள கமின்ஸ், ஆனால் இதன்மூலம் ஒரு சிலரது வாழ்வில் வெளிச்சத்தை கொண்டுவர முடியும் என்று தான் நம்புவதாக தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2021 கடந்த 9ம் தேதி முதல் துவங்கி நடைபெற்ற வரும் நிலையில், இந்த வேளையில் 25,000 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளன.