பிர்மிங்காம்: மிகவும் ஸ்டாராங்காக இங்கிலாந்து அணி பேட்டிங் செய்த நேரத்தில் எங்கிருந்தோ வந்த புறாவால் கவனம் சிதறிய ஜென்னிங்ஸ் ஆட்டமிழந்தார். அதன்பிறகு, இந்தியா தொடர்ந்து விக்கெட்களை வீழ்த்தியது. புறாவால் ஆட்டத்தின் போக்கே மாறியது.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பிர்மிங்காமில் நேற்று துவங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அலிஸ்டர் குக், கீடன் ஜென்னிங்ஸ் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 13 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் குக் ஆட்டமிழந்தார். அதன்பிறகு ஜென்னிங்ஸ் மற்றும் ஜோ ரூட் நிதானமான விளையாடினர்.
இருவரும் இணைந்து உணவு இடைவேளைக்கு முன் 57 ரன்கள் சேர்த்திருந்தனர். உணவு இடைவேளைக்குப் பிறகு, 7 ஓவர்களில் 14 ரன்கள் சேர்த்து, மிகவும் வலுவாக இருந்தனர்.
36வது ஓவரை வீச வந்தார் முகமது ஷமி. அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு புறா, பிட்ச் அருகில் வந்தது. அதை ரூட் மற்றும் ஜென்னிங்ஸ் விரட்டினர். ஆனாலும், அது அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தது.
அதன்பிறகு ஷமி வீசிய பந்தை விளையாடினார் ஜென்னிங்ஸ். எட்ஜ் வாங்கிய பந்து, அவருடைய ஷூவில் பட்டு, ஸ்டம்ப் மீது மோதியது. பெயில்ஸ் கீழே விழ, துரதிருஷ்டவசமாக அவர் ஆட்டமிழந்தார். புறாவால் கவனம் சிதறியதால், அவர் ஆட்டமிழந்தார்.
அதன்பிறகுதான் இந்தியா தொடர்ந்து விக்கெட்களை வீழ்த்தியது. ஆட்ட நேர இறுதியில் இங்கிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்துள்ளது. ஒரு புறாவால், ஆட்டத்தின் போக்கே மாறிவிட்டது.