423 ரன்கள்
இந்திய அணியில் அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 105 பந்துகளை சந்தித்து 19 ரன்களையும், ரஹானே 54 பந்துகளை சந்தித்து 18 ரன்களையும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சிங்கிள் டிஜிட்டில் வெளியேறினார்கள். லோகேஷ் ராகுல் 0, புஜாரா 1, கேப்டன் கோலி 7, பண்ட் 2, ஜடேஜா 4 என்று வெளியேறினார்கள். இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், க்ரெய்க் ஓவர்டன் தலா 3 விக்கெட்டுகளையும், ஓலே ராபின்சன், சாம் கர்ரன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பிறகு, களமிறங்கிய இங்கிலாந்து அணி, நேற்றைய 2வது நாள் ஆட்ட நேர முடிவில், தனது முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 423 ரன்கள் குவித்தது.
மிரட்டிய ஜோ ரூட்
இங்கிலாந்து தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸ் 61 ரன்களும், ஹஸீப் ஹமீத் 68 ரன்களும், டேவிட் மலன் 70 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ஜோ ரூட் வழக்கம் போல, இந்திய பவுலர்களை சிறப்பாக டீல் செய்து 121 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இந்தியாவை விட அந்த அணி 345 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இப்போது அனைவரின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும், இந்தியா 2வது இன்னிங்ஸில் எப்படி விளையாடப் போகிறது என்பதில் தான் உள்ளது.
நம்பிக்கை கொடுத்த கூட்டணி
குறிப்பாக, இந்திய அணியின் மிடில் ஆர்டருக்கு இந்த போட்டி மீண்டும் ஒரு அக்னீப்பரீட்சை எனலாம். இந்தியாவின் பெரும் பின்னடைவாக இருப்பது மிடில் ஆர்டர் தான். புஜாரா, கேப்டன் கோலி மற்றும் ரஹானேவின் ஆட்டம் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பே, புஜாராவுக்கு பதில் வெளியே அமர்ந்திருக்கும் மாயங்க் அகர்வால் அல்லது சூர்ய குமார் யாதவ் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று சீனியர் வீரர்கள் வலியுறுத்தினர். அதேசமயம், மீண்டும் புஜாராவுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற கருத்தும் மறு தரப்பில் எழுந்தது. லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில், இரண்டாம் இன்னிங்ஸில் இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. எனினும், புஜாராவும், ரஹானேவும் நான்காம் நாள் ஆட்டத்தில் சிறப்பாக கைக் கொடுத்தனர். 206 பந்துகளை சந்தித்த புஜாரா 45 ரன்களும், 146 பந்துகளை சந்தித்த ரஹானே 61 ரன்களும் எடுத்தனர். இருவரும் சேர்ந்து கிட்டத்தட்ட 4 மணி விளையாடினர். முழுதாக 50 ஓவர்களை எதிர்கொண்டனர். ஒருநாள் போட்டியில் ஒரு அணியே முழுமையாக பேட்டிங் செய்யும் ஓவர்கள் எண்ணிக்கை இது. இருவரும் தங்களது அனுபவத்தை அந்த இன்னிங்ஸில் வெளிப்படுத்தினார்கள். சரி.. ஃபார்முக்கு வந்துவிட்டார்கள் போல என அனைவரும் நினைக்க, மீண்டும் தங்களது அபாரமான சொதப்பல் ஃபார்மை, மூவரும் இந்த 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெளிப்படுத்தினார்கள். 1,7,18.. இதுதான் புஜாரா, கோலி, ரஹானே ஆகிய மூவரும் சேர்த்து எடுத்த ரன்கள்.
ரியான் பராக் ட்வீட்
இந்த நிலையில், இந்திய கேப்டன் விராட் கோலி, இரண்டாம் இன்னிங்சில நிச்சயம் சதம் அடிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீர்ர் ரியான் பராக். ராஜஸ்தான் அணியில் நம்பிக்கை மிகுந்த ஆல் ரவுண்டராக உருவெடுத்து இருக்கும் ரியான் பராக், கோலி சதம் அடிப்பார் என்று ட்வீட் செய்துள்ளார். அவர் தனது டீவீட்டில், ""Virat Kohli 100 2nd innings lesgoo" என்று பதிவிட்டுள்ளார். அவ்வளவு கான்ஃபிடண்ட் போல தம்பிக்கு. இருந்தாலும், இவரது நம்பிக்கையை விராட் கோலி நிறைவேற்றுவாரா? வாய்ப்பிருக்கு. எப்படி தெரியுமா? அதற்கு முதலில் விராட் கோலி செய்ய வேண்டியது, தனது ஆட்டத்தின் மீது அவர் நம்பிக்கை வைக்க வேண்டும். குறிப்பாக, கவர் டிரைவ் ஷாட்ஸ் அடிப்பதை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும். ஏனெனில், ஆண்டர்சன் பக்காவாக பிளான் செய்து, விராட் கோலியை டிரைவ் அடிக்கத் தூண்டி காலி செய்து வருகிறார். இதனை, கோலி புரிந்து கொள்ள வேண்டும். கொஞ்சம் டெக்னிக்கலாக யோசித்து பிளான் செய்தால் போதும்.. நிச்சயம் விராட் கோலி சதம் அடிக்க முடியும்.
சிலிர்த்தெழ வேண்டும்
ஆனால், இப்போது கோலி சதம் அடிப்பதை விட முக்கியமானது, 3வது டெஸ்ட் போட்டியில், தோல்வியின் பிடியில் இருந்து இந்தியா தப்பிப்பதே. இன்னும் முழுமையாக 3 நாட்கள் உள்ளன. தோல்வியை தவிர்க்க வேண்டுமெனில், இந்திய முழுமையாக 2 நாட்கள் பேட்டிங் செய்ய வேண்டும். அதற்கு கோலி மட்டும் சதம் அடித்தால் போதாது. ஒட்டுமொத்த அணியும் ஒன்று சேர்ந்து தங்களால் முடிந்த தி பெஸ்ட் பங்களிப்பை கொடுக்க வேண்டும். குறிப்பாக, மிடில் ஆர்டர் வீரர்கள் தங்கள் பொறுப்பு என்ன என்பதை உணர்ந்து ஆட வேண்டும். சுமையை தூக்கி சுமக்க வேண்டும். லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் ஃபீனிக்ஸ் பறவையை மீண்டெழுந்த இந்திய அணியைப் போல, அனைத்து வீரர்கள் சிலிர்த்தெழ வேண்டும். ரியான் பராக் கணிப்பு பலிக்குமா? ஜோசியம் எடுபடுமா?
பொறுத்திருந்து பார்ப்போம்!