பெங்களூர்: மாரத்தான் போல தொடர்ச்சியாக அதிகமுறை பந்து வீசி சாதனை படைத்துள்ளார் இந்திய ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின்.
உலக அளவில் சுழல் பந்துவீச்சாளர்களில் முன்னிலை வகிப்பவர் இந்தியாவின், அஸ்வின். இவர் பந்து வீசுவதோடு, பேட்டிங்கிலும் கலக்கி வருகிறார். இதனால் தொடர்ந்து ஆல்ரவுண்டர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
இந்நிலையில் ஒரு ஆண்டில் அதிக முறை பந்து வீசிய இந்திய சுழல் பந்துவீச்சாளர்களில் முதல் இடம் பிடித்துள்ளார் அஸ்வின். 2016-17ம் ஆண்டில் மட்டும் 3,701 பந்துகள் வீசியுள்ளார். ஓவர்கள் எண்ணிக்கையில், இது 616.5 ஓவர்கள் ஆகும்.
முன்னதாக இந்தியாவின், அனில் கும்ப்ளே, 2004-05ம் ஆண்டில் 3,673 பந்துகள் (612.1 ஓவர்கள்) வீசி இருந்தார். கும்ப்ளேவின் இந்த சாதனையை அஸ்வின் முறியடித்து முதலிடம் பிடித்துள்ளார்.
இந்த பட்டியலில், முன்றாவது இடத்தில் வினோ முன்கட் உள்ளார். 1952-53ம் ஆண்டு 3662 பந்துகள் வீசியிருந்தார் இவர். 4வது இடத்தில் உள்ள, திலிப் தோசி 1979-80ம் ஆண்டில் 3515 பந்துகளும், 5வது இடத்தில் உள்ள ரவிந்திர ஜடேஜா 2016-17ல் 3469 பந்துகளையும் வீசி முதல் 5 இடத்தை பிடித்துள்ளனர்.
தற்போது பெங்களூரில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் வரையிலான கணக்குதான் இது. எனவே அஸ்வினின் பந்து வீச்சு கணக்கு இன்னும் அதிகரிக்கும் என நம்பலாம்.