ரோகித்தின் கேப்டன்சி
தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் மற்றும் முழு நேர கேப்டனாக ரோகித் சர்மா என இவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்த முதல் தொடரே பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதற்கு காரணம் இவர்களின் அணித் தேர்வு தான். சீனியர் வீரர்களுக்கு நிகராக இளம் வீரர்களுக்கும் ப்ளேயிங் 11 தைரியமாக வாய்ப்புகளை கொடுத்து ஆச்சரியம் கொடுத்தனர். அவர்களும் எளிதாக வெற்றிகளை பெற்றுக்கொடுத்தனர்.
ஜாகீர் பாராட்டு
குறிப்பாக 2வது டி20 போட்டியின் போது முதல் விக்கெட்டிற்கு வெங்கடேஷ் ஐயரை களமிறக்கியது எதிர்காலத்தை எப்படி ரோகித் பார்க்கிறார் என்பதை விளக்கியது. இக்கட்டான சூழல்களில் திடீரென பேட்டிங் வரிசையை மாறினால் வெற்றி கிடைக்கலாம். அதற்கு வீரர்களை தயார் செய்யும் நோக்கில் ரோகித் நடந்துக்கொண்டதாக ஜாகீர் கான் பாராட்டியிருந்தார். இதே போல டிராவிட்டும் இளம் வீரர்களை வளர்த்துவிடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பதால் இனி இளம் வீரர்களின் பங்களிப்பையே அதிகம் பார்க்கலாம் எனக்கூறப்படுகிறது.
பாண்டிங் எச்சரிக்கை
இந்நிலையில் சீனியர் வீரர்களுக்கு முன்னாள் வீரர் ரிக்கிப்பாண்டிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் விளையாடக் கூடிய திறமையானவர்கள் இந்தியாவில் அதிகரித்து வருகின்றனர். இதன் காரணமாக சீனியர் வீரர்கள் தங்களின் இடங்களை இழக்கும் அபாயம் உள்ளது. ஒவ்வொரு போட்டியிலும் திறமையை நிரூபித்தாக வேண்டும் என்ற நெருக்கடியில் விளையாடுவார்கள். இதனால், தங்களின் பார்மை அவர்கள் இழக்க வாய்ப்புள்ளது.
5 வீரர்கள்
எதிர்காலத்தில் ரோகித் ஷர்மா, விராட் கோலி போன்ற மூத்த வீரர்களின் இடங்களை நிரப்ப 5 பேர் இருக்கிறார்கள். பிரித்வி ஷா, வெங்கடேஷ் ஐயர், ருதுராஜ் கெயிக்வாட், தேவ்தத் படிக்கல், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் அடுத்த தலைமுறை இந்திய அணியின் நட்சத்திரங்களாக திகழ்வார்கள் என எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர்களால், சீனியர் வீரர்களின் இடங்களை சுலபமாக நிரப்ப முடியும். இதனால், இந்திய அணியின் எதிர்காலத்திற்கு பெரிய பிரச்சினை இருக்காது என ரிக்கிப் பாண்டிங் கூறியுள்ளார்.