மான்செஸ்டர்: நியூசி.க்கு எதிரான முதல் அரையிறுதி போட்டியில் 3 முத்தான சாதனைகளை படைக்க காத்திருக்கிறார் ரோகித் சர்மா.
உலக கோப்பையின் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 9 போட்டிகளில் பங்கேற்று 15 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இதனால் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் இன்று அரையிறுதியில் மோதுகிறது.
இந்த தொடரில் 9 போட்டிகளில் 5 சதங்களுடன் 647 ரன்கள் குவித்து எடுத்து இந்திய அணியின் ரன் குவிப்புக்கு முக்கிய காரணமாக இருப்பவர் ரோகித் சர்மா. நியூசிலாந்துக்கு எதிராக ரன் வேட்டையை தொடர்ந்தால் முத்தான 3 இமாலய சாதனைகளை அவர் படைப்பார்.
உலக கோப்பையில் ஒரு தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்களில் முதலிடத்தில் இருப்பது சச்சின். 2003ம் ஆண்டு உலக கோப்பையின் போது சச்சின் 673 ரன்கள் எடுத்ததே சாதனையாக உள்ளது. நியூசி.க்கு எதிரான போட்டியில் ரோகித் 27 ரன்கள் எடுத்தால் 16 ஆண்டுகள் கழித்து அதனை முறியடிக்கும் வீரர் என்ற பெருமையை பெறுவார்.
உலக கோப்பை தொடரில் மொத்தமாக சச்சின், ரோகித் சர்மா 6 சதங்கள் விளாசி இருக்கின்றனர். நியூசிலாந்துக்கு எதிராக சதம் விளாசினால் அதிக சதம் அடித்தவர்களில், சச்சினை பின்னுக்கு தள்ளி ரோகித் முதலிடம் பிடித்து சாதனை படைப்பார்.
இதுதவிர, உலக கோப்பையில் யாரும் படைக்காத ஒரு சாதனையை படைக்க இருக்கிறார் ரோகித். 53 ரன்களை கடந்தால் உலக கோப்பை தொடரில் 700 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற வரலாறு சாதனையை படைப்பார். ஆக 3 முத்தான சாதனைகளை படைக்க அவர் காத்திருப்பதால், ரசிகர்கள் இந்த போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கின்றனர்.