ரோகித் தவறு
இந்திய அணியின் தோல்விக்கு ஃபீல்டிங் சொதப்பல், பவுலிங் சொதப்பல் என பல்வேறு காரணங்கள் எழுந்து வந்தாலும், ரோகித் செய்த தவறு யார் கண்களுக்கும் தெரியவில்லை. பவர் ப்ளே ஓவரில் இந்தியாவால் குறைந்தது 2 விக்கெட்களை கைப்பற்றியிருக்க முடியும். ஆனால் தினேஷ் கார்த்திக்-ஐ வைத்து ரோகித் தப்புக்கணக்கு போட்டுவிட்டார்.
புதிய வியூகம்
அதாவது ஆட்டத்தின் முதல் பந்து முதலே விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், ஸ்பின்னர்களுக்கு நிற்பது போல ஸ்டம்பிற்கு அருகில் வந்து நின்றார். ஓப்பனிங் வீரர் ஆரோன் ஃபிஞ்ச் வழக்கமாக இறங்கி வந்து அடிக்கக்கூடிய சுபாவமுடையவர். குறிப்பாக ஸ்விங் ஆகும் பந்துகளை சற்று முன்வந்து ஆடினால் சுலபமாக அடிக்கலாம் என்ற வித்தை தெரிந்தவர். எனவே ஒருவேளை பந்தை மிஸ் செய்தால் தினேஷ் கார்த்திக் ஸ்டம்பிங் செய்யலாம் என்பதற்காக முன் நிற்கவைக்கப்பட்டார்.
என்ன பிரச்சினை
ஆனால் இதுதான் எமனாக அமைந்தது. புவனேஷ்வர் குமார் இன்ஸ்விங்கிற்கு ஸ்பெஷலிஸ்ட் என்றாலும், நன்கு குத்திப்போட்டு தான் அவர் ஸ்விங் செய்வார். அப்படி போட்டால் பந்து தினேஷ் கார்த்திக்கை தாண்டி சென்றுவிடும். குறிப்பாக பவுன்சரே போட முடியாது. இதனால் வேறு வழியின்றி அனைத்து பந்துகளை குட் லெந்த்-லேயே வீசினார். அதாவது கால்களுக்கு அருகிலேயே. அதில் அவருக்கு ஸ்விங் கிடைக்காததால் பந்து சிக்ஸர்களுக்கு பறந்தது.
வழக்கமான திட்டம் என்ன
மொஹாலி மைதானத்தை பொறுத்தவரை பேட்டிங்கிற்கு சாதகமான ஒன்றாகும். இங்கு பேட்ஸ்மேன் செட்டாகிவிட்டால் ரன்கள் மளமளவென உயரும். எனவே புவனேஷ்வர் குமாரை வழக்கமான திட்டத்தில் விட்டிருந்தால் சுலபமாக விக்கெட்களை அள்ளியிருப்பார். ஆனால் புதுவித முயற்சி என்ற பெயரில் அதிக இலக்கை கூட விட்டுக்கொடுத்துள்ளனர்.