பெங்களூரு: ஐசிசியின் பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் ஒருதினப் போட்டியில் முதலிடம், டெஸ்ட் போட்டிகளில் 2வது இடம், டி-20ல் மூன்றாவது இடம். இது இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோஹ்லியின் அதிரடியை எடுத்துக் காட்டும் பட்டியல். ஆனால், தற்போது நடக்கும் ஐபிஎல் போட்டியில் ஏதோ மந்திரிச்சு விட்டதுபோல் கோஹ்லி உள்ளார்.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடர் சீசன் 11 நடந்து வருகிறது. இந்த முறை கிட்டத்தட்ட பல அணிகளுக்கு புது கேப்டன்கள், புது வீரர்கள் கிடைத்துள்ளனர். ஒவ்வொருவரும் தங்களுடைய திறமையை நிரூபித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆட்டமும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
2008ல் இருந்து பெங்களூரு அணியில் உள்ள விராட் கோஹ்லி, 2013 முதல் அதன் கேப்டனாக உள்ளார். இதுவரை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை பெங்களூரு வென்றதில்லை. 2009, 2011, 2016ல் பைனல்ஸ் வரை மட்டுமே நுழைந்துள்ளது.
இதுவரை நடந்துள்ள 10 சீசன்களில், மூன்று இந்தியர்கள் மட்டுமே, அதிக ரன் குவிப்புக்கான ஆரஞ்ச் கேப் பெற்றுள்ளனர். 2010ல் சச்சின் டெண்டுல்கர், 2014ல் ராபின் உத்தப்பா, 2016ல் விராட் கோஹ்லி ஆகியோர் ஆரஞ்ச் கேப் பெற்றனர்.
சர்வதேசப் போட்டிகளில் கடந்த சில ஆண்டுகளாக மிகச் சிறந்த கேப்டனாக வலம் வருகிறார் விராட் கோஹ்லி. ஆனால், ஐபிஎல் போட்டிகளில் மட்டும் அவரால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. இந்த சீசனில் இதுவரை பெங்களுரு அணி விளையாடிய மூன்று போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது.
பேட்டிங்கிலும் விராட் கோஹ்லி பெரிய அளவுக்கு சோபிக்கவில்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சஞ்சு சாம்சன் 3 போட்டிகளில் 178 ரன்கள் எடுத்து, ஆரஞ்ச் கேப் போட்டியில் முதலிடத்தில் உள்ளார். இதில் விராட் கோஹ்லி 109 ரன்களுடன் 12வது இடத்தில் உள்ளார். அதிகபட்சம், 57 ரன்கள் எடுத்துள்ளார். அடுத்து வரும் ஆட்டங்களில் விராட் கோஹ்லியின் வழக்கமான அதிரடி ஆட்டம் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.