ருதுராஜ் கெயிக்வாட்
முதலில் நிதானமாக ஆடிய அவர், முதல் 61 பந்துகளை சந்தித்து வெறும் 19 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். இதனால் 96வது பந்தில் தான் தனது அரைசதத்தையே பூர்த்தி செய்தார். இதன்பின்னர் கியரை மாற்றிய அவர், சௌராஷ்டிரா பவுலிங்கை அடித்து நொறுக்கினார். அடுத்த 64 பந்துகளில் 83 ரன்களை குவித்து தனது சதத்தை பூர்த்தி செய்தார். நடப்பு தொடரில் அவரின் 4வது சதம் இதுவாகும்.
நாக் அவுட் சதங்கள்
அதுவும் கடைசி 5 இன்னின்ஸில் இது அவரது 4வது சதம் ஆகும், காலிறுதியில் இரட்டை சதம், அரையிறுதியில் சதம், தற்போது இறுதிப்போட்டியிலும் சதம் என நாக் அவுட் போட்டிகளை வீடியோ கேம் போல அடித்து நொறுக்கியுள்ளார். 3 நாக் அவுட்களிலும் சதம் விளாசிய ஒரே ஒரு வீரர் இவர் தான் ஆகும். கடைசி 10 விஜய் ஹசாரே இன்னிங்ஸ்களில் அவர் 7 சதங்கள் மற்றும் ஒரு இரட்டை சதம் என உச்சகட்ட ஃபார்மை காட்டியுள்ளார்.
புதிய சாதனை
இந்நிலையில் இதன் மூலம் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. அதாவது விஜய் ஹசாரே வரலாற்றில் இதுவரை அதிக சதம் அடித்த வீரர்களாக ராபின் உத்தப்பா மற்றும் அன்கித் பாவ்னே இருந்தனர். ஆனால் இன்று அவர்களை முந்தி 12 சதங்களுடன் ருதுராஜ் கெயிக்வாட் புதிய சாதனையை படைத்துள்ளார். இதற்காக பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
ஒட்டுமொத்த ரன்கள்
லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ரன் குவிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அப்படி இருக்கையில் ருதுராஜ் கெயிக்வாட் இதுவரை 71 முதல் தர போட்டிகளில் 4,028 ரன்களை குவித்துள்ளார். இதில் 15 சதங்களும், 16 அரைசதங்களும் அடங்கும். இப்படி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள ருதுராஜுக்கு இந்திய அணியில் இனியாவது சரியாக இடம் கிடைக்குமா என ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர்.