
தி கிரேட் இந்தியன் கிரிக்கெட் ஸ்டோரி புத்தக வெளியிட்டு விழா
நேற்று மும்பையில் ஒரு தனியார் ஹோட்டலில் "டெமாக்ரசி 11- தி கிரேட் இந்தியன் கிரிக்கெட் ஸ்டோரி" என்ற கிரிக்கெட் பற்றிய புத்தகம் வெளியிடப்பட்டது. பிரபல பத்திரிக்கையாளர் ராஜ்தீப் சர்தேசி என்பவரால் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தில் இந்திய கிரிக்கெட் எப்படியெல்லாம் மாறியது , பல மதங்கள் உள்ள நம் நாட்டில் கிரிக்கெட் எப்படியெல்லாம் ஒற்றுமையை ஏற்படுத்தியது என்று ராஜ்தீப் சர்தேசி எழுதியுள்ளார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த புத்தகம் நேற்று வெளியிடப்பட்டது. இந்த வெளியிட்டு விழாவில் சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், அசாருதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்திய வீரர்கள் பற்றிய உரையாடல்
இந்த புத்தக வெளியிட்டு விழா முடிந்ததும் மேடையில் இருந்த முன்னாள் ஜாம்பவான்கள் அனைவரும் தங்களது வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான கிரிக்கெட் சம்பவங்கள் குறித்து பேசினார். அசாருதீன் தலைமையில் இந்திய அணி ஆடியது, கபில் தேவ் தலைமையில் உலகக் கோப்பையை வென்றது. சச்சின் 100 சதங்கள் அடித்தது என பல விஷயங்களை அவர்கள் இந்த உரையாடலில் பேசினர். மேலும் தற்போது இந்திய அணியில் இருக்கும் வீரர்கள் குறித்தும், இந்திய நியூசிலாந்து தொடர் குறித்தும் அந்த கலந்துரையாடலில் அவர்கள் பேசினார்கள்.

கோஹ்லியின் 31 வது சதம்
இந்த நிலையில் அவர்கள் கோஹ்லி அடித்த சதங்கள் குறித்தும் பேசினர். முன்னதாக இந்தியாவுக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி மிகவும் சிறப்பாக விளையாடி 121 ரன்கள் எடுத்தார். இது அவரது 31 சர்வதேச ஒருநாள் சதம் ஆகும். இந்த சதத்தின் மூலம் அவர் அதிக சதங்கள் அடித்தவர் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் சச்சின் டெண்டுல்கர் இருக்கிறார்.

கோஹ்லி குறித்து பேசிய சச்சின்
இந்த நிலையில் கோஹ்லி குறித்து அந்த உரையாடலில் சச்சின் பேசினார். அதில் "கோஹ்லி முதல் முதலில் விளையாட வந்த போது அவர் கண்களில் ஒரு நெருப்பை பார்த்தேன். அந்த நெருப்புதான் அவரை இந்த அளவுக்கு விளையாட வைக்கிறது. அவரிடம் மிகவும் விடாப்பிடியான குணம் இருக்கிறது அதுதான் அவரது வெற்றியின் ரகசியம். அவர் தனது கோபத்தை தனது அணியில் இருக்கும் அனைத்து வீரர்களுக்கும் கடத்துகிறார். அதுதான் இந்திய அணியின் வெற்றிக்கான ரகசியம்" என்று கோஹ்லியின் வெற்றி ரகசியம் குறித்து சச்சின் கூறினார்.


Click it and Unblock the Notifications