சௌதாம்ப்டன் : இந்தியா, இங்கிலாந்து இடையே நான்காவது டெஸ்ட் போட்டி நேற்று ரோஸ் பவுல் மைதானத்தில் துவங்கியது. இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயத்திலும், இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட் போட்டியின் தோல்வியில் இருந்து மீளவும் நான்காவது டெஸ்ட் போட்டிக்கு தயாரானார்கள்.
டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அந்த முடிவு தவறு என்பதற்கு ஏற்ப, இங்கிலாந்து 36 ரன்களுக்கு 4 விக்கெட்கள் இழந்தது. தொடர்ந்து விக்கெட்கள் வீழ, இங்கிலாந்து 86 ரன்களுக்கு 6 விக்கெட்கள் என மோசமான நிலையில் இருந்த போது, நான்காவது டெஸ்ட்டுக்கு அணியில் சேர்க்கப்பட்ட மொயீன் அலி மற்றும் சாம் கர்ரன் கூட்டணி அமைத்து அணியை மீட்டனர்.
இவர்கள் இருவரும் இணைந்து 81 ரன்கள் குவித்தனர். மொயீன் அலி 40 ரன்களில் வெளியேற, சாம் கர்ரன் பின்வரிசை பேட்ஸ்மேன்களோடு இணைந்து வேகமாக ரன் குவித்தார். 78 ரன்கள் குவித்த கர்ரன் கடைசியாக அஸ்வின் பந்தில் போல்டானார். இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 150ரன்களை கூட தாண்டுமா என்ற சந்தேகத்தில் இருந்த இங்கிலாந்து, இவர்கள் இருவரின் பொறுப்பான ஆட்டத்தால், 246 ரன்களை எட்டியது.
இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் மோசமாக ஆடிய நிலையில், மொயீன் அலியும், சாம் கர்ரனும் தான் அணியை மீட்டுள்ளனர். இவர்களில் மொயீன் அலி முதல் மூன்று டெஸ்டில் வாய்ப்பு பெறவில்லை. முதல் இரண்டு போட்டிகளில் சிறப்பாக ஆடிய சாம் கர்ரன், மூன்றாவது போட்டியில் ஸ்டோக்ஸுக்கு இடம் அளிக்க கழட்டிவிடப் பட்டார்.
இந்த போட்டியில் இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர். பும்ரா 3, இஷாந்த் 2, பண்டியா 1, ஷமி 2, அஸ்வின் 2 என அனைத்து பந்துவீச்சாளர்களும் தங்கள் பங்களிப்பை அளித்தனர். இந்தியா முதல் இன்னிங்க்ஸில் 19 ரன்கள் எடுத்து விக்கெட் இழக்காமல் இருக்கிறது. தவான் மற்றும் ராகுல் களத்தில் இன்று மீண்டும் ஆட்டத்தை துவங்கவுள்ளனர்.