துரத்தும் காயம்
இந்நிலையில், 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக ஷர்துல் தாகூர் வெளியேறியுள்ளார். இதனை இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் (virtual press conference) கேப்டன் கோலி உறுதி செய்துள்ளார். நாட்டிங்ஹாமில் நடந்த முதல் டெஸ்டில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் உட்பட நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய ஷர்துலுக்கு இடது தொடை எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஷர்துல், ஆகஸ்ட் 25ம் தேதி லீட்ஸ் மைதானத்தில் நடைபெறும் மூன்றாவது டெஸ்டில் பங்கேற்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. முதல் டெஸ்டில் இந்தியாவின் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களில் குறைவாக பந்து வீசியவர் ஷர்துல் தான். 26 ஓவர்களே வீசினார். அப்போது அவருக்கு உடலில் எந்த அசௌகரியமும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால், கடந்த திங்களன்று தொடை எலும்பு காயம் குறித்து அவர் தெரிவிக்கவே தொடர்ந்து நடைபெற்ற சோதனையில் அவர் ஓய்வில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இஷாந்த் 100% ஃபிட்?
ஆனால், இப்போ ஹைலைட் என்னவெனில், தாகூருக்கு பதில் யார் அணியில் இடம் பெறப் போவது? என்பது தான். இந்திய அணியில் நான்கு சீமர்கள் இருந்த நிலையில், இப்போது எண்ணிக்கை மூன்றாக குறைந்துள்ளது. ஒருவேளை இஷாந்த் ஷர்மா காயத்தில் இருந்து குணமடைந்துவிட்டால் அவருக்கு நிச்சயம் அணியில் இடம் கிடைக்கும் என்று தெரிகிறது. காயம் காரணமாகவே முதல் டெஸ்ட்டில், இஷாந்த் சேர்க்கப்படவில்லை. சிராஜுக்கு லக் அடித்தது. அவரும் தன் திறமையை வெளிப்படுத்தினார். இப்போது இஷாந்த் நல்ல முன்னேற்றம் அடைந்திருப்பதாக லண்டனில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி ஒருவேளை இஷாந்த் 100% ஃபிட் என்றால், நிச்சயம் அவருக்கு தான் நாளை வாய்ப்பு என்று தெரிகிறது.
ஏன் சேர்க்கவில்லை?
அதேசமயம்.. இஷாந்த் காயத்தில் இருந்து குணமடையவில்லை என்றால்? இங்கு தான் அஷ்வினை அணியில் சேர்க்க வேண்டும் என்ற குரல் பலமாக எழுந்துள்ளது. முன்னாள் இந்திய வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் அஷ்வினை 2வது போட்டியில் நிச்சயம் சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் தாகூர் காயம் அடைந்ததற்காகவே இதைச் சொல்லவில்லை. அவரது கான்செப்ட், ஏன் அஷ்வினை முதல் போட்டியிலேயே சேர்க்கவில்லை என்பதுதான். ஆனால், கேப்டன் விராட் கோலி இன்று நடந்த பிரஸ் மீட்டில் அஷ்வின் குறித்த எந்த அறிகுறியையும் மறந்து கூட வெளிப்படுத்தவில்லை. ரொம்பவே உஷாராக பேசினார்.
பேட்டிங் ஓகே
கோலி பிரஸ் மீட்டில் பேசுகையில், "ஷர்துல் 2வது டெஸ்ட்டில் இல்லை. எனினும், நல்ல விஷயம் என்னவென்றால், ஜடேஜா ஏற்கனவே முதல் ஆட்டத்தில் ரன்கள் எடுத்துள்ளார், எனவே அவர் நம்பிக்கையுடன் இரண்டாவது ஆட்டத்தில் இறங்குவார். எனவே, இது எங்கள் பேட்டிங்கை இன்னும் ஆழமாக்குகிறது, லோ ஆர்டர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டது. ஷர்துல் அதிக பேட்டிங் திறனைக் கொண்டவர். எனினும், அவர் இல்லையென்றாலும் எங்கள் பேட்டிங் யூனிட்டின் டெப்த் நன்றாக உள்ளது. அதேசமயம், புஜாரா, ரஹானே மற்றும் நான் அதிகம் ஸ்கோர் செய்யவில்லை.
20 விக்கெட்ஸ்
ரோஹித் மற்றும் லோகேஷ் நன்றாக விளையாடினார்கள், நாங்கள் எப்படி விளையாடுகிறோம் என்பதில் நாங்கள் திருப்தியாக இப்போது அவருக்கு மாற்றாக இருக்கிறோம். ஷர்துல் விளையாடவில்லை என்றால் நாங்கள் பேட்ஸ்மேன்கள் குறைவாக இருப்பதாக நாங்கள் உணரவில்லை. எங்களைப் பொறுத்தவரை, சரியான மாற்று ஆப்ஷனை கண்டறிவது தான். ஷர்துல் விளையாடவில்லை என்றாலும், நாங்கள் 20 விக்கெட்டுகளையும் முதல் டெஸ்ட் போட்டி போல எடுக்க முயற்சிப்போம்" என்று கூறியுள்ளார்.
வாய்ப்பு இல்லை
கோலியின் இந்த பதில்களின் மூலம் நமக்கு புரிவது, இந்தியா பேட்டிங்கிற்காக இன்னொரு பேட்ஸ்மேனை நோக்கி செல்லாது என்பது தான். எனவே, அஷ்வினை பேட்டிங் திறனும் கொண்ட வீரர் என்பதற்காக எடுக்க தயாராக இல்லை என்பதை சுற்றி வளைத்து கோலி சொல்ல வருகிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. அதேசமயம், அவர் ஜடேஜாவின் பேட்டிங் திறனையும் பாராட்டியுள்ளார். ஸோ, பேட்டிங் சப்போர்ட்டுக்காக அஷ்வின் அணியில் இடம்பிடிக்க வாய்ப்பே இல்லை என்பது உறுதியாகிறது. அதேசமயம், இஷாந்த் நாளை தகுதிப் பெறவில்லை என்றால், கோலிக்கு அஷ்வினை தவிர வேறு எந்த ஆப்ஷனும் இல்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஜடேஜா முதல் டெஸ்ட்டில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை என்பதும் இங்கு ஹைலைட் செய்யப்பட வேண்டிய பாயிண்ட்டாகும்.