ஷார்ஜா: பாகிஸ்தான் அணியின் ஆல்-ரவுண்டராக விளங்கும் சோயிப் மாலிக் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார்.
34 வயதான பாகிஸ்தான் நாட்டு ஆல்-ரவுண்டர் சோயிப் மாலிக், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை மணந்துள்ளார். மாலிக் கடந்த 2010-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.
அதன்பின்னர் சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இங்கிலாந்து தொடரில் இடம்பிடித்தார். அசார் அலிக்கு காயம் ஏற்பட்டதால் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.
அபுதாபியில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். அதில் 245 ரன்கள் எடுத்த அவர், அதன்பின் நடைபெற்ற போட்டிகளில் 0, 2, 7, 0 என ஒற்றை இலக்க ரன்களுக்கும் குறைவாக எடுத்து அடுத்தடுத்து சொதப்பினார்.
இந்நிலையில், பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்டின் 2-வது இன்னிங்சில் சோயிப் டக் அவுட் ஆகி வெளியேறினார். அத்துடன் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ''ஓய்வு பெற இதுதான் சரியான நேரம்'' என்றார். இந்த அறிவிப்பினால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் 2-வது இன்னிங்சில் பந்து வீசுவார். முதல் இன்னிங்சில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
கடந்த 2001-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமான மாலிக். 34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1860 ரன்களும், 25 விக்கெட்டும் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும், ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் தொடர்ந்து விளையாடுவார் என தெரிகிறது.