40 பந்தில் 105.. யாருப்பா அந்த சிவகாசி சிவகுமார்? டி20யில் ரோமானியாவை உலக சாதனை செய்ய வைத்த தமிழர்!
Recommended Video
இல்போவ் : 12 வருட சர்வதேச டி20 சாதனை ஒன்றை முறியடித்துள்ளது ரோமானியா அணி. அந்த சாதனைக்கு முக்கிய காரணமாக இருந்தது தமிழ்நாட்டை சேர்ந்த சிவகுமார் பெரியாழ்வார் ஆவார்.
துருக்கி அணிக்கு எதிராக நடந்த போட்டியில் ரோமானியா அணி 173 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முந்தைய சாதனைகளை உடைத்தது.
சிவகுமார் பெரியாழ்வார் இந்தப் போட்டியில் 40 பந்துகளில் 105 ரன்கள் குவித்து அசத்தினார். அது தான் ரோமானியா பெரிய வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தது.

யார் இந்த சிவகுமார்?
சிவகுமார் பெரியாழ்வார் சிவகாசியை பூர்விகமாகக் கொண்டவர். தற்போது ரோமானியா நாட்டில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். சிறு வயதில் இந்திய உள்ளூர் அணிகளில் அண்டர் 15, அண்டர் 22, அண்டர் 25 போட்டிகளில் ஆடி இருக்கிறார்.

கிளப் கிரிக்கெட்
ரோமானியாவில் பணிக்கு சென்ற பின் அங்கே கிரிக்கெட் கிளப் இருப்பது தெரிந்து வார விடுமுறை நாட்களில் கிரிக்கெட் ஆடி வந்துள்ளார். அந்த நாட்டின் டி20 தொடரில் சிறப்பாக ஆடி தேசிய அணியிலும் இடம் பெற்றுள்ளார். தொடர்ந்து ஆடி வந்த அவர் துருக்கி அணிக்கு எதிராக கலக்கி இருக்கிறார்.

ரோமானியா பேட்டிங்
ரோமானியா கோப்பை தொடரில் துருக்கி அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்தது ரோமானியா. முதல் 15 ஓவர்களில் நல்ல ரன்னை எட்டியது ரோமானியா. சிவகுமார் அப்போது ஆடி வந்தார்.

சிவகுமார் அதிரடி
அணியின் ரன் ரேட்டை உயர்த்தலாம் என்ற முடிவுக்கு வந்த ரோமானியா அணியினர், சிவகுமாரை அதிரடியாக ஆடுமாறு கூறி உள்ளனர். அதையடுத்து அதிரடிக்கு மாறிய அவர் வெளுத்து வாங்கினார். 40 பந்துகளில் 105 ரன்கள் குவித்தார். ரோமானியா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்தது.

துருக்கி படுதோல்வி
227 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய துருக்கி வெறும் 53 ரன்கள் எடுத்து படுதோல்வி அடைந்தது. 173 ரன்கள் வெற்றி பெற்றது ரோமானியா. இது சர்வதேச டி20யில் பெரிய சாதனை ஆகும்.

சாதனை வெற்றி
கடந்த 2007 டி20 உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணி 172 ரன்கள் வித்தியாசத்தில் கென்யா அணியை வீழ்த்தி இருந்தது. அந்த சாதனையை முறியடித்தது ரோமானியா.


Click it and Unblock the Notifications