எல்லா மேட்சும் ஜெயிக்கணும்
இந்திய அணியின் கேப்டன் பதவி என்பது, உலகின் வேறு எந்த கிரிக்கெட் அணி கேப்டனின் பதவியை விட மிகக் கடுமையானது, அழுத்தத்திற்கு உரியது. இங்கே, கேப்டன் என்றால், அனைத்துப் போட்டிகளிலும் வென்றுக் கொடுத்தே தீர வேண்டும். இல்லையெனில், நிலைமை மோசம் தான். இதனால், ஆளானப்பட்ட சச்சினால் கூட கேப்டனாக சாதிக்க முடியவில்லை.
அவரே விலகிட்டார்
சக வீரர்களின் உள்குத்து, அதீத பொறாமை, தலைக்கு மேல் தொங்கும் கத்தி என எல்லாவற்றையும் ஓவர்டேக் செய்து சாதிக்க வேண்டிய பொறுப்பு இந்திய கேப்டன்களிடம் உள்ளது. நவீன கால கிரிக்கெட்டில் இதனை மிகச் சரியாக செய்தது மகேந்திர சிங் தோனி மட்டுமே. இதனால் தான் மிக நீண்ட காலத்திற்கு அவரால் கேப்டனாக கோலோச்ச முடிந்தது. ஆனால், ஒருகட்டத்தில் அவரது நிலையும், சொல்லிக் கொள்ளாமல் கேப்டன் பதவியில் இருந்து விலகும் சூழ்நிலை ஏற்பட்டது தனிக்கதை.
சரியத் தொடங்கியது ஏன்?
தோனி, இந்திய அணியின் டி20, ஒருநாள், டெஸ்ட் என மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் கேப்டனாக இருந்த காலம் அது. 'கூல்' கேப்டன் என பெயர் பெற்றவர், உலகின் மற்ற அணி வீரர்கள் சிலர் கூட தோனியின் தலைமையில் விளையாட விரும்புவதாக கூறிய பெருமை கொண்டவர்.... இக்கட்டான சூழ்நிலைகளை திறம்பட கையாண்டவர்... இப்படி பல சிறப்பம்சங்கள் இருந்தும் தோனியின் கேப்டன்சி சரியத் தொடங்கியது எதனால்?.
பதில் சொல்ல முடியல
மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் கேப்டனாக இருந்த தோனியால், அழுத்தங்களை சிறப்பாக கையாள தெரிந்த தோனியால், ஒருக்கட்டத்தில் அந்த அழுத்தத்தை சமாளிக்க முடியவில்லை. மூன்று வடிவ கிரிக்கெட்டிலும், வெற்றி, தோல்வி மாறி மாறி வரத் தொடங்க, டி20 போட்டியில் ஏன் தோற்றோம்? என்று ஆராய்வதற்குள், டெஸ்ட் போட்டியில் தோல்வி. டெஸ்ட் போட்டியை இழந்துவிட்டோமே என்று நினைப்பதற்குள் ஒருநாள் போட்டியில் தோல்வி. எதற்கும் அவரால் பதில் சொல்ல முடியவில்லை.
சாதித்த ரஹானே
இப்போது அதே போன்றதொரு முத்தரப்பு ஆளுமையாக உருமாற முயற்சித்துக் கொண்டிருக்கிறார் விராட் கோலி. ஆஸ்திரேலியாவில் கடந்த டிசம்பர் - ஜனவரியில் நடந்த அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், இந்தியா வரலாற்றில் இல்லாத அளவுக்கு மோசமாக தோல்வி அடைந்து. வெறும் 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி சுருண்டது இந்திய அணி. அதன் பின் கோலி நாடு திரும்ப, ரஹானே கேப்டன் பொறுப்பேற்க, 2- 1 என்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா. இந்த தோல்விக்கு பல கிரிக்கெட் வல்லுநர்கள் சொன்ன காரணம் கோலியின் அளவு கடந்த பிரஷர். மூன்று வடிவ கிரிக்கெட்டுக்கு கேப்டன், பெர்சனல் வாழ்க்கை, தனது தனிப்பட்ட பேட்டிங் ஃபெர்பாமன்ஸ் என்று கோலி மூன்றையும் பேலன்ஸ் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. பணிச் சுமைகளை பிரிக்கும் போது, கோலியால் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்பதே அவர்களது கருத்து.
ஒன்றரை வருடம்
இப்படி யோசித்துப் பாருங்கள், டெஸ்ட் கேப்டன்ஷிப்பை ரஹானேவிடம் கொடுத்துவிட்டு, டி20 அணியை ரோஹித் கைகளில் கொடுத்து, கோலி ஒருநாள் அணிக்கு கேப்டனாக தொடர்ந்தால் எப்படி இருக்கும்? நிச்சயம், கேப்டனாக அவரது சுமை குறையும், வீரராக அவரது ஆட்டத்திறன் இன்னும் வலுவடையும். மறந்துவிடாதீர்கள்.. கோலி சதம் அடித்து ஒன்றரை வருடம் ஆகிவிட்டது.