ஆசிய கோப்பை தோல்விகள்
ஆசிய கோப்பை தொடரில் குரூப் சுற்று "பி" பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை இடம் பெற்றன. அதில் இலங்கை, வங்கதேசம் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும் என பலரும் நினைத்த நிலையில், ஆப்கனிஸ்தான் இரண்டு அணிகளையும் வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. இலங்கை வங்கதேசத்திடமும் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.
எல்லா முடிவும் சேர்ந்து எடுத்தது
இது பற்றி தன் பக்க நியாயத்தை கடிதமாக எழுதி வெளியிட்டுள்ளார் ஆஞ்சலோ மாத்யூஸ். அதில், "அணியின் தோல்விக்கு காரணம் என என் மீது இருக்கும் புகாரை நான் ஏற்றுக் கொள்கிறேன். அதே சமயம், என் மீது மட்டும் புகார் கூறி இருப்பது எனக்கு துரோகம் செய்தது போல இருக்கிறது. அனைத்து முடிவுகளும் தேர்வாளர்கள் மற்றும் தலைமை பயிற்சியாளருடன் இணைந்து தான் எடுக்கப்பட்டது. கேப்டன் மட்டுமே தோல்விக்கு காரணம் என்பதை நான் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், நான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று பதவி விலகுகிறேன்" என கூறியுள்ளார்.
என் தலைமையில் பெற்ற வெற்றிகள்
ஆஞ்சலோ மாத்யூஸ் 2013 முதல் ஜூன் 2017 வரை கேப்டன் பதவியில் இருந்தார். அந்த காலகட்டத்தில் இங்கிலாந்தில் பெற்ற தொடர் வெற்றி, ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 3-0 என வெற்றி, ஆசிய கோப்பை 2014 வெற்றி ஆகியவை பற்றி குறிப்பிட்டுள்ளார் அவர்.
கேப்டன்கள் மாற்றம்
ஜூலை 2017இல் ஆஞ்சலோ மாத்யூஸ் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதன் பின், உபுல் தரங்கா, திசேரா பெரேரா, சமரா காபுகேதரா, லசித் மலிங்கா, தினேஷ் சண்டிமால் என பல கேப்டன்கள் நியமிக்கப்பட்டு பல தோல்விகள் மட்டுமே மிஞ்சியதால் மீண்டும் 2017 டிசம்பர் மாதம் ஆஞ்சலோ மாத்யூஸ் கேப்டன் பதவிக்கு திரும்பினார். அப்போது அவரை 2019 உலகக்கோப்பை வரை கேப்டன் பதவியில் இருக்குமாறு கேட்டுக் கொண்டார்கள் என குறிப்பிட்டுள்ளார் மாத்யூஸ்.
நான் ஓய்வு பெற்று விடுகிறேன்
தான் கிரிக்கெட் ஆட தகுதி இல்லை என தேர்வாளர்கள் நினைத்தால் தான் ஓய்வு பெற்று விடுவதாகவும் கூறியுள்ளார் மாத்யூஸ். தான் அணிக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை எனவும் கூறியுள்ளார். இலங்கை அணியில் கடைசியாக ஜெயவர்தனே, சங்ககாரா போன்ற திறமை வாய்ந்த வீரர்கள் விலகியவுடன் திக்கு தெரியாமல் திணறி வருகிறது அந்த அணி. கேப்டன் மாற்றினால் மட்டும் வெற்றிகள் கிடைத்துவிடுமா?