கோலியின் ஃபார்ம்
இந்திய அணியின் விக்கெட்கள் சில சமயங்களில் மளமளவென சரியும் போதெல்லாம், விராட் கோலி தான் தூண் போன்று நிலைத்து நின்று காப்பாற்றுகிறார். நடப்பு தொடரில் அதிக ரன்களை அடித்துள்ள வீரர்களின் பட்டியலிலும் முதலிடத்தில் இருந்து வருகிறார். அதாவது 5 இன்னிங்ஸ்களில் 3 அரைசதங்களுடன் சேர்த்து 246 ரன்களை குவித்துள்ளார்.
அதிர்ச்சி சம்பவம்
இப்படிப்பட்ட நல்ல ஃபார்மில் இருக்கும் கோலி ஜிம்பாப்வே போட்டியில் செய்த ஒரு விஷயம் தான் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய இன்னிங்ஸின் போது 7வது ஓவரில் தான் இந்த சம்பவம் நடந்தது. ரன் ஓடுவதில் கிங்-காக இருக்கும் அவர், திடீரென ஓட முடியாமல் கீழே குனிந்து மூச்சு விடவே சிரமப்பட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இதுமட்டுமல்லாமல் நெஞ்சை பிடித்துக்கொண்டு அவர் சிரமப்பட்டுக்கொண்டிருந்தார்.
என்ன தான் நடந்தது
அந்த ஓவரின் 3வது பந்தை அடித்துவிட்டு கோலி 2 ரன்களை வேகமாக ஓடி எடுத்தார். இதன்பின்னர் 4வது பந்தை கேப்பில் அடிக்க முயன்று அருகில் இருந்த ஃபீல்டரிடமே தான் சென்றது. எனினும் அதனை பயன்படுத்த விரும்பிய கோலி, மிகவும் வேகமாக சிங்கிள் ஓடி எடுத்தார். அப்போது தான் அவருக்கு மூச்சு பிரச்சினை ஏற்பட்டு, ஆட்டம் சிறிது விநாடிகள் நிறுத்தப்பட்டது.
தோனியின் அதே நிலை
கடந்த 2020ம் ஆண்டு தோனிக்கும் இதே நிலைமை தான் ஏற்பட்டது. ரன் ஓடுவதில் ஸ்பெஷலிஸ்ட்டான அவர், ஐபிஎல் தொடரின் போது, ஓட முடியாமல் மூச்சு விடுவதற்கே சிரமப்பட்டு வந்தார். கோலிக்கும் வயதாகிவிட்டது இது போன்ற சூழல்கள் வரும் போது தான் தெரியவருகிறது. 34 வயதாகும் அவர், அடுத்தாண்டு டி20 கிரிக்கெட்டில் இருந்து மட்டும் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.