மொகாலி: ஐபிஎல் 11வது சீசனில் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் மோதிய முதல் ஆட்டமே பரபரப்பாக துவங்கியுள்ள நிலையில், மொகாலியில் இன்று நடக்கும் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இதுவரை சிஎஸ்கேவுக்காக விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின், கேப்டன் அவதாரம் எடுத்துள்ள இந்தப் போட்டியில் சாதிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியின் 11வது சீசன் துவங்கியுள்ளது. மொத்தம், 51 நாட்களில், 8 அணிகள், 60 போட்டிகளில் விளையாட உள்ளன. நேற்று இரவு நடந்த முதல் ஆட்டத்தில், கடைசி நேரத்தில் பிராவோ அதிரடியாக விளையாட, நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை, சிஎஸ்கே அபாரமாக வென்றது.
டி-20 போட்டி என்றால் இப்படித்தான் இருக்கணும் என்ற அளவுக்கு, யாருமே யூகிக்க முடியாத திடீர் திருப்பங்கள் நிறைந்ததாக அந்தப் போட்டி அமைந்தது. ஐபிஎல் அணிகளுக்கான வீரர்கள் ஏலத்தின்போதும், திடீர் திருப்பதாக அஸ்வினை, சிஎஸ்கே தக்க வைக்கவில்லை. ஏலத்தின்போது, கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஏலம் எடுத்தது.
இந்த சீசனில் 8 அணிகளில், 7 அணிகளின் கேப்டன்களாக இந்தியர்கள் உள்ளனர். அதில் அஸ்வின் மற்றும் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தினேஷ் கார்த்திக் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். கேப்டன்களில் ஒரே பவுலர் அஸ்வின் தான். யுவராஜ் சிங், கிறிஸ் கெயில் போன்ற அதிரடி ஆட்டக்காரர்கள் உள்ளது பஞ்சாப் அணிக்கு சாதகமாகும்.
கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இரண்டு முறை கோப்பையை வென்று தந்த கவுதம் கம்பீர், டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார். மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
இரு அணிகளும் இதுவரை 20 முறை மோதியுள்ளன. அதில் பஞ்சாப் 11 முறையும், டெல்லி 9 முறையும் வென்றுள்ளன. மொகாலி மைதானத்தில் நடந்த 5 போட்டிகளில், பஞ்சாப் 4 முறையும், டெல்லி ஒரு முறையும் வென்றுள்ளன.
அஸ்வின் இதுவரை எந்த டி-20 அணிக்கும் கேப்னாக இருந்ததில்லை, அதே நேரத்தில் கம்பீர் 123 போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார். இந்தப் போட்டி கேப்டன்களின் திறமையை சோதிக்கும் போட்டியாக அமைந்துள்ளது. மேலும் சிஎஸ்கேவுக்கு பிராவோ அதிரடியாக ஆடியதுபோல, பஞ்சாப் அணிக்காக விளையாடும் டி-20 ஸ்பெஷலிஸ்ட் கிறிஸ் கெயில் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.