சூடு பிடித்த ஏலம்
2018 ஐபிஎல் சீசன் மிக அருமையாக இருந்தது என்றால் அதற்கு இரண்டு அணிகள் தான் காரணம். ஒன்று சிஎஸ்கே, மற்றொன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத். ஐபிஎல் 2018இல் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மீண்டும் களம் இறங்கிய நிலையில், ஏலம் கடுமையாக சூடு பிடித்தது.
சிஎஸ்கே அனுபவசாலிகள் அணி
ராஜஸ்தான் அணி கூட தன் பழைய வீரர்களை மீண்டும் பெற வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனி தொடங்கி ரெய்னா, பிராவோ, ஜடேஜா, பிளேஸிஸ் என பழைய வீரர்களை மீண்டும் பெறுவதில் முனைப்பாக இருந்தது. ஏலத்திற்குப் பின் சென்னை அணி வயதான அணி என கிண்டல் அடிக்கப்பட்டது. பல வீரர்களும் 3௦ வயதுக்கு மேலே இருந்தனர். ஆனால், இறுதியில் கோப்பை வென்று இது வயதானவர்கள் அணி இல்லை, அனுபவசாலிகள் அணி என பெயர் பெற்றது. முக்கியமாக அம்பதி ராயுடு நான் இன்னும் பார்மில் தான் இருக்கிறேன் என நிரூபித்து தற்போது இந்திய அணியில் ஆட காரணமாக இருந்தது சிஎஸ்கே-யின் இந்த சீசன்.
ஸ்மித், வார்னர் குழப்பம்
பந்து சேத விவாகரத்துக்கு பின் ஸ்மித், வார்னர் ஐபிஎல் தொடரில் ஆடவில்லை. அவர்கள் ஐபிஎல்-இல் பங்கேற்க வைக்க வாய்ப்புகள் இருந்தும், சர்ச்சைகளை கிளறாமல் இருக்க வேண்டி அவர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை. சன்ரைசர்ஸ் அணியில் டேவிட் வார்னரும், ராஜஸ்தான் அணியின் ஸ்மித்தும் கேப்டன் பதவிக்கு அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அவர்களுக்கு பதில் ராஜஸ்தான் அணியில் ரஹானேவும், ஹைதராபாத் அணியில் கேன் வில்லியம்சனும் கேப்டன் பொறுப்பை ஏற்றார்கள்.
கடைசியில் தடுமாறிய சன்ரைசர்ஸ்
இப்படி திடீர் கேப்டன் பதவி ஏற்ற கேன் வில்லியம்சன் ஹைதராபாத் அணியை வெற்றியின் பாதையில் அழைத்துச் சென்றார். இந்த சீசனில் மிகச் சிறந்த பந்துவீச்சை கொண்டிருந்த அணி என்றால் அது இந்த அணி தான். ரஷித் கான், ஷகிப் அல் ஹசன், புவனேஸ்வர் குமார் என சிறந்த பந்துவீச்சாளர்களை கொண்டு இருந்த இந்த அணி குறைந்த ரன்கள் எடுத்த போட்டிகளையும் வென்று ஆச்சரியம் அளித்தது. பேட்டிங்கில் கேன் வில்லியம்சன் அசத்தினார். முதல் 11 போட்டிகளில் ஆடி 9 வெற்றிகள் பெற்று சென்னை அணியை விட முன்னிலையில் இருந்த இந்த அணி, கடைசி மூன்று லீக் போட்டிகளை தோற்றதோடு சென்னை அணியோடு ப்ளே-ஆஃப் மற்றும் இறுதிப் போட்டியையும் தோற்றது.
மும்பை இந்தியன்ஸ் ஏன் இப்படி?
இந்த இரண்டு அணிகளுக்கு அடுத்து அதிகம் எதிர்பார்ப்புகளை கிளப்பி ஏமாற்றம் அளித்த அணிகள் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர். மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று முறை சாம்பியன், ரோஹித் சர்மா தலைமை, சிறந்த வீரர்கள் என எல்லாம் இருந்தும் பல போட்டிகளை கடைசி ஓவரில், கடைசி நேர சொதப்பல்களில் தோற்று அதிர்ச்சி அளித்தனர்.
இரண்டு தூண்கள் கொண்ட பெங்களூர்
பெங்களூர் அணியை பற்றி "என்னத்த சொல்வது", என்பது போல உலகின் மிக சிறந்த இரண்டு பேட்ஸ்மேன்கள் இருந்தும் மோசமாக ஆடியது அந்த அணி. டி வில்லியர்ஸ், கோலி என்ற இரண்டு பெரிய தூண்கள் இருந்தும் வீடு கட்ட ஆள் இல்லாத அணியாக இருந்தது ராயல் சாலஞ்சர்ஸ். பேட்டிங்கில் கோலி, டி வில்லியர்ஸ் சிறப்பாக ஆடினர் என்றாலும், மற்றவர்கள் யாரும் இவர்களுக்கு கை கொடுக்கவில்லை. பந்துவீச்சில் உமேஷ் ஆறுதல் அளித்தார். சீசன் தொடங்கும் முன் கோலி அணி பைனல் வரை போகும் என அடித்துக் கூறியவர்கள் எல்லாம் பின்னர் தலைமறைவாக ஒளிந்து கொண்டனர்.
ப்ளே-ஆஃப் சென்ற கொல்கத்தா அணி
தினேஷ் கார்த்திக் கேப்டனா? என கேள்வியோடு தன் பயணத்தை தொடங்கியது கொல்கத்தா அணி. ஆனால், அதே தினேஷ் கார்த்திக் கொல்கத்தா அணியை ப்ளே-ஆஃப் அழைத்துச் சென்றார். துரதிர்ஷ்டவசமாக இரண்டாவது குவாலிஃபயரில் தோல்வி அடைந்தது இந்த அணி. கொல்கத்தா அணி பல அணிகளும் பரிசோதிக்க தயங்கிய சில விஷயங்களை அனாயசமாக செய்தது. சுனில் நரைனை துவக்க வீரராக இறக்கி, ஆட்டமிழந்தாலும் பரவாயில்லை, அதிரடியாக ஆடினால் போதும் என கூறியது. சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரியான மாற்றங்களை அதிரடியாக செய்தது. சீசன் தொடங்கிய போது இருந்த எதிர்பார்ப்பை விட அதிக தூரம் சென்றது கொல்கத்தா.
ரஹானேவின் ராஜஸ்தான் ராயல்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஷேன் வார்னே அவ்வப்போது அளித்த ஆலோசனைகளை வைத்து ப்ளே-ஆஃப் வரை முன்னேறியது. ரஹானே நானும் ஒரு கேப்டன் என்பதை போல நடந்து கொண்டாரே ஒழிய, ஒரு வேகம், விவேகம் எல்லாம் அவரது தலைமையில் இல்லை. அவரது பேட்டிங்கும் சரியில்லை. ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் பேட்டிங்கிலும், ஆர்ச்சர் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டனர், மற்ற வீரர்கள் யாரும் சொல்லிக் கொள்ளும்படி ஆடவில்லை. மிக அதிக விலைக்கு ராஜஸ்தான் அணி ஏலம் எடுத்த பென் ஸ்டோக்ஸ் நன்றாக வெறுப்பேற்றினார்.
ஐயோ பாவம் அணிகள்
பரிதாபத்துக்குரிய இரண்டு அணிகள் என்றால் அவை டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப். பஞ்சாப் அணிக்கு இந்த முறை அஸ்வின் கேப்டனாக பொறுப்பேற்றார். முதல் ஆறு போட்டிகளில் ஐந்தை வென்று மற்ற அணிகளுக்கு புளியை கரைத்த இந்த அணி கடைசி ஐந்து லீக் போட்டிகளில் தோற்றது அதிர்ச்சியாக இருந்தது. டெல்லி அணி துவக்கத்தில் படுமோசமாக ஆடியது. கேப்டன் கம்பீர் பாதி தொடரில் கேப்டன் பதவியில் இருந்து விலக, ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன் பொறுப்பை ஏற்றார். கடைசி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று ஆறுதல் தேடிக் கொண்டது இந்த அணி.