பெங்களூரு: ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்திய பின்னர் இந்திய அணி கேப்டன் அஜிங்கியா ரஹானே நேற்று செய்த காரியம் அனைவரின் பாராட்டுக்களையும் அள்ளியுள்ளது.
பெங்களூரில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி பெங்களூரில் நடந்தது. ஆப்கானிஸ்தானுக்கு டெஸ்ட் அந்தஸ்து கொடுக்கப்பட்ட பின்னர் பங்கேற்ற முதல் போட்டி இது.

இப்போட்டியில் இந்தியா பேட்டிங்கிலும், பின்னர் பந்து வீச்சிலும் அசத்தியது. ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு நிறைய பாடம் கற்றுக் கொடுத்தது. டெஸ்ட் போட்டியில் எப்படி ஆட வேண்டும் என்ற லாவகத்தை ஆப்கானிஸ்தான் வீரர்கள் தெரிந்து கொள்ள நல்ல வாய்ப்பாக இது அமைந்தது.
போட்டியின் முடிவில் வெற்றிக் கோப்பையுடன் இந்திய வீரர்கள் போஸ் கொடுத்தனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் சற்று தொலைவில் நின்று கொண்டிருந்த ஆப்கானிஸ்தான் அணியினரையும் கேப்டன் ரஹானே அழைத்து போஸ் கொடுக்க நிற்கச் சொன்னார்.
இது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. விளையாட்டின் உயரிய நோக்கத்தை தூக்கிப் பிடித்த ரஹானேவி்ன் செயலால் ஆப்கானிஸ்தான் அணியினரும் நெகிழ்ந்து போயினர்.
பிரமாதம்ணே.. ரஹானே!