பந்துவீச்சு மோசம்
இந்த ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கு பந்துவீச்சு மோசமாக அமைந்ததே காரணமாக இருந்தது. அக்சர் படேலை தவிர மற்ற அனைத்து இந்திய பந்து வீச்சாளர்களும் ரன்களை வாரி வழங்கினர். அதிலும் இறுதிக்கட்ட ஓவர்களில் புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல் ஆகியோரது பந்துகளில் எந்தவித சிரமமும் இன்றி ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ரன்களை குவித்தனர்.
உலகக்கோப்பைத் தொடர்
குறிப்பாக பும்ரா இல்லாதது இந்திய பந்துவீச்சில் உள்ள குறையை வெட்ட வெளிச்சமாக காட்டியது. டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இன்றைய ஆட்டம் உட்பட 5 டி 20 போட்டிகளில் மட்டுமே இந்திய அணி விளையாட உள்ளது. உலகக் கோப்பை தொடருக்கு ஆயத்தமாக இன்னும் சில ஆட்டங்களே உள்ள நிலையில் பந்துவீச்சு நாளுக்கு நாள் பலவீனம் அடைந்து வருவது அணியின் இந்திய அணியின் ரசிகர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு இன்றைய ஆட்டத்தில் தீர்வு காண இந்திய அணி முயற்சி செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கலாம்.
டாஸ் தாமதம்
இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நாக்பூரில் இன்று நடைபெறுகிறது. கடந்த 2 நாட்களாக நாக்பூர் பகுதியில் கன மழை தொடர்ந்து பெய்ததால், மைதானத்தில் ஈரப்பதம் அதிகமாக இருக்கிறது. ஏற்கனவே கனமழை காரணமாக இந்திய அணியின் பயிற்சிகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் 6.30 மணி டாஸ் போடுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அவுட்ஃபீல்டில் ஈரப்பதன் குறையாததால் 7 மணிக்கு டாஸ் போடுவதாக மாற்றப்பட்டது.
8 மணிக்கு மீண்டும் சோதனை
7 மணிக்கு கள நடுவர்களுடன் இணைந்து ஆட்ட நடுவர் மைதானத்தில் இருந்த அவுட்ஃபீல்டில் பரிசோதனை மேற்கொண்டனர். அப்போதும் ஈரப்பதம் குறையாததால், 8 மணி டாஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் போட்டியில் ஓவர்கள் குறைக்கப்படுமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.