மொயின் அலி அச்சுறுத்தல்
இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர்தான் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராதவிதமாக சுழல் பந்து வீச்சாளர் மொயின் அலி இந்திய விக்கெட்டுகளை அள்ளி வருகிறார்.
இந்திய அணிக்கு திடீர் ஏமாற்றம்
ஆப் ஸ்பின்னரான மொயின் அலி நான்கு டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் 19 விக்கெட்டுகளை வாரி சுருட்டியுள்ளார். சுழல்பந்து தேசத்தில் இருந்து சென்ற இந்திய அணியை புதிதாக வந்த சுழல் பந்து வீச்சாளர், பெரிதும் சாதிக்காத ஒரு பவுலர் அச்சுறுத்தலுக்குள்ளாக்கி வருவது இந்திய ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக உள்ளது.
இயன்பெல் ஆலோசனை
மொயின் அலியின் திடீர் எழுச்சிக்கான காரணத்தை அவரே நிருபர்களிடம் தெரிவித்தார். "முதல் டெஸ்ட் போட்டியில் நான் கூடுதல் ரன்னை வாரி வழங்கிவிட்டேன். வீரர்களுக்கான அறையில் சோகமாக அமர்ந்து எனது பந்து வீச்சை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது இயன்பெல் என்னை தனியாக அழைத்து சென்று சில அறிவுரைகளை வழங்கினார்.
தர்மசேனா வழிகாட்டல்
முதல் நாள் பிட்சில் பந்தை வேகமாகவும், நேராகவும் வீச வேண்டும். அப்போதுதான் மற்றொரு ஸ்வானாக உருவாக முடியும் என்று பெல் எனக்கு அறிவுரை கூறினார். இதை மனதில் வைத்துக் கொண்டு வலைப்பயிற்சிக்கு சென்றேன். வலைப்பயிற்சிக்கு சென்றபோது அங்கு, நடுவர் குமார் தர்மசேனாவும் இருந்தார். அவரிடம், பந்தை 'பிளாட்டாக' வீசாமல், வேகமாக எறிவது கடினமாக உள்ளதே, அதை எப்படி செய்வது என்று கேட்டேன். அப்போதுதான் அவர் ஒரு யோசனை கூறினார். 'பந்தை வீசும்போது உடனடியாக இடது கையால் உங்களது, பாக்கெட்டை இறுக்கி பிடித்துக்கொள்ளுங்கள்' என்று தெரிவித்தார்.
பலன் கிடைத்ததே...
இதன்பிறகு குமார்தர்மசேனா கூறியபடி பந்தை வீசினேன். அவர் கூறியபடியே வேகமாகவும், பிளாட் இல்லாமல் தூக்கியும் எறிய முடிந்தது. இதன்பிறகு போட்டியிலும் இதையே செய்தேன். இதற்கு கைமேல் பலன் கிடைத்தது". இவ்வாறு மொயின் அலி தெரிவித்தார். இரு அணிகளுக்கு நடுவேயான இறுதி டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் இந்த பேட்டியை மொயின் அலி அளித்துள்ளார். குமார் தர்மசேனா இலங்கையின் முன்னாள் ஆப் ஸ்பின்னர் என்பது குறிப்பிடத்தக்கது.