திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நேற்று நடந்த டிஎன்பிஎல் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டு கைகளாலும் பவுலிங் செய்து அசத்தினார் விபி காஞ்சி வீரன்ஸ் அணியின் மோஹித் ஹரிஹரன்.
டிஎன்பிஎல் டி-20 மூன்றாவது சீசன் ஆட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் விபி காஞ்சி வீரன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வென்றது.
இந்த ஆட்டத்தின்போது, காஞ்சி அணியின் மோஹித் ஹரிஹரன் 50 பந்துகளில் 5 பவுண்டரிகள், 5 சிக்சர்களுடன் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அடுத்து பவுலிங் செய்தபோது, இரண்டு கைகளாலும் மாறி மாறி பந்து வீசி அசத்தினார் மோஹித். வலது கை பேட்ஸ்மேனுக்கு இடது கையாலும், இடது கை பேட்ஸ்மேனுக்கு வலது கையாலும் பந்து வீசினார் மோஹித். அவர் 4 ஓவர்களை வீசி 32 ரன்கள் கொடுத்தார்.
Yes. Believe what you are seeing. @sprite_india refreshing moment of the day. #TNPL2018 #NammaOoruNammaGethu pic.twitter.com/4RrgSBsMXW
— TNPL (@TNPremierLeague) July 22, 2018
இவ்வாறு இரண்டு கைகளாலும் பந்து வீசும் திறமை கொண்ட இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை மோஹித் பெற்றார். விதர்பா அணி வீரர் அக்ஷய் கர்னேவர், 2015ல் பரோடாவுக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை போட்டியில் இவ்வாறு இரண்டு கைகளாலும் பந்து வீசினார்.
அதன்பிறகு, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னையில் நடந்த பயிற்சி ஆட்டத்தின்போது கிரிக்கெட் வாரிய அணிக்காக பந்து வீசும்போது, இவ்வாறு இரண்டு கைகளால் பந்து வீசி மிரள வைத்தார்.
இலங்கையின் கமிண்டு மென்டில், பாகிஸ்தானின் யாசிர் ஜான் ஆகியோரும் இதுபோன்ற திறமையைக் கொண்டவர்கள். முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஹனீப் முகம்மது, கிரகாம் கூச் ஆகியோரும் இரண்டு கைகளாலும் பவுலிங் செய்யும் திறமையை பெற்றிருந்தனர்.