கோப்பையை கைப்பற்ற மும்முரம்
ஐபிஎல் போட்டிகளுக்காக விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிவீரர்கள் மிகவும் கடுமையாக பயிற்சி மேற்கொண்டுள்ளனர். கடந்த 2009, 2011 மற்றும் 2016 ஆகிய ஐபிஎல் சீசன்களில் இறுதிப்போட்டி வரை வந்துள்ள போதிலும் ஆர்சிபி இதுவரை ஒருமுறை கூட கோப்பையை கைப்பற்றவில்லை. இந்த ஆண்டு கோப்பையை கைப்பற்ற அந்த அணி வீரர்கள் மும்முரத்துடன் உள்ளனர்.
ஏபி டீ வில்லியர்ஸ் புகழ்ச்சி
இந்நிலையில் முன்னாள் தென்னாப்பிரிக்க கேப்டன் ஏபி டீ வில்லியர்ஸ், சிறிய நிகழ்வுகளில்கூட அணியின் கேப்டன் விராட் கோலி அணியை முன்னிருந்து வழிநடத்துவதாக புகழ்ந்துள்ளார். ஆர்சிபியின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் பேசிய அவர், கோலி போன்ற கேப்டன் கிடைத்தால் எல்லா விஷயங்களையும் அணி வீரர்கள் எளிதாக செய்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.
பிசிசிஐ சிறப்பான செயல்பாடு
ஐபிஎல் போட்டிகளை சிறப்பாக நடத்த பிசிசிஐ சிறப்பான செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் வில்லியர்ஸ் பெருமை தெரிவித்துள்ளார். இந்த தொடரை விளையாட ஆர்வமுடன் காத்துள்ளதாகவும் கூறினார். ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்காக ஆர்சிபி அணி வீரர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மீண்டும் விளையாடுவது சிறப்பு
கொரோனாவால் கிடைத்த இடைவெளி மட்டுமின்றி ஒரு தொடருக்கும் மற்ற தொடருக்கும் இடையில்கூட இடைவெளி காணப்படும் என்றும் மேலும் காயங்கள் காரணமாகவும் இடைவெளி உண்டாகும் என்று கூறியுள்ள டீ வில்லியர்ஸ், ஆனால் அதிலிருந்து மீண்டு மீண்டும் விளையாடுவதே கிரிக்கெட்டின் சிறப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.