சௌதாம்ப்டன் : இந்தியா 1-3 என இங்கிலாந்து டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. நேற்று நடந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தொடரில் இன்னும் ஒரு போட்டி மீதமிருந்தாலும், தொடரை இழந்த நிலையில் அது முக்கியமற்ற போட்டியாகவே இருக்கும்.
இந்த நிலையில், நேற்று தோல்விக்கு பின் பேசிய கோலி வெளிப்படையாக இந்திய வீரர்களின் தவறுகள் குறித்து பேசாமல், இங்கிலாந்தின் வெற்றிக்கு அவர்களைப் பாராட்டினார். இந்தியாவின் தோல்வி பற்றி பொதுவான விஷயங்களை பேசினாரே, தவிர செயல்படாத வீரர்களையோ, தவறான முடிவுகளையோ பற்றி பேசவில்லை.
நேற்று அவர் பேசும் போது, "நேற்று இரவு இருவருக்கும் பாதி-பாதி வாய்ப்பு இருந்தது. எங்களுக்கு நல்ல துவக்கம் கிடைக்கவில்லை. இங்கிலாந்து அதிக அழுத்தம் கொடுத்தது. நாங்கள் எங்கள் சிறந்த முயற்சிகளை செய்தோம். ஆனால், அது போதவில்லை. நாங்கள் இன்று அதிக தவறு செய்தோம் என நினைக்காதீர்கள். இங்கிலாந்துக்கு நன்றாக ஆடியது. எங்களிடம் அதிக எதிர்மறை விஷயங்கள் இல்லை. நேர்மறை விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்த விரும்புகிறோம். அப்படியே இறுதிப் போட்டிக்கு செல்ல விரும்புகிறோம்" என கூறினார்.
மேலும், சாம் கர்ரன், மொயீன் அலி ஆகியோரையும் பாராட்டி பேசியிருக்கிறார். இதுபோல், தன் அணியின் தவறுகளை பற்றி பேசாமல் இருப்பது சில சமயம் சரியான செயல்முறையாக இருக்கலாம். ஆனால், முதல் இரண்டு போட்டிகளை இழந்த போதும் அப்படித்தான் இருந்தார். தற்போது நான்காம் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்துள்ளது.
நிச்சயம் இந்தியா இந்த நான்கு போட்டிகளிலும் தவறுகள் செய்தன. வெற்றி பெற்ற மூன்றாம் போட்டியில் கூட இந்தியா தடுமாறியது என்பதே உண்மை. ஜோஸ் பட்லரை இரண்டாம் இன்னிங்க்ஸில் வெளியேற்ற முடியாமல் இந்தியா திணறியது.
தவறுகளை சுட்டிக் காட்டாத அணுகுமுறை எப்படி வேலை செய்யும் என கோலி நினைக்கிறார் என்பது புரியவில்லை. மூன்றாம் போட்டியில் பெற்ற வெற்றி கோலியின் இந்த அணுகுமுறையால் கிடைத்த வெற்றி அல்ல. அப்போது வீரர்கள் அணியில் தங்கள் இடத்தை தக்க வைக்க நடத்திய போரட்டத்தின் காரணமாக இந்தியா வென்றது. இதை அணியின் உதவி பயிற்சியாளர் சஞ்சய் பங்கரே கூறி இருக்கிறார்.
இந்த நான்காம் போட்டியில் இந்திய துவக்க வீரர்கள் எந்த வேலையும் அணிக்காக செய்யவில்லை, பண்டியா பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, குறிப்பாக பேட்டிங்கில் சொதப்பினார், மொயீன் அலியால் செய்ய முடிந்த சுழல் வித்தையை தற்போது உலகின் முன்னணி சுழல் பந்துவீச்சாளராக இருக்கும் அஸ்வினால் செய்ய முடியவில்லை..இப்படி விராட் கோலி பேச வேண்டிய தவறுகள் நிறைய இருக்கின்றன. அவர் இன்னும் நேர்மறையை நோக்கி செல்கிறோம் என செல்வது எப்படி அணிக்கு உதவும் என தெரியவில்லை.
இனியாவது வீரர்கள் தங்கள் தவறுகளை வெளிப்படையாக பேசி, அதிலிருந்து மீள்வார்களா? அல்லது விமர்சனம் எழுந்தால் மட்டுமே சிறப்பாக செயல்படுவார்களா?