ஒருநாள் தொடர்
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரையும் நேற்றைய தினம் நடந்து முடிந்துள்ள டி20 தொடரையும் முறையே 3க்கு 1 மற்றும் 3க்கு 2 என்ற கணக்கில் இந்தியா வெற்றி கொண்டுள்ளது. இதையடுத்து வரும் 23ம் தேதி முதல் 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் மோதவுள்ளன.
இந்தியா தொடர் வெற்றி
5 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் 4 போட்டிகளில் விளையாடி இரு அணிகளும் 2க்கு 2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்த நிலையில் நேற்றைய தினம் வெற்றியை தீர்மானிக்கும் 5வது போட்டியில் இரு அணிகளும் மோதின. இந்த போட்டியில் இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
விராட் 80 ரன்கள் குவிப்பு
இந்த போட்டியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் அரைசதம் அடித்து போட்டியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர். குறிப்பாக கேப்டன் விராட் கோலி அவுட் ஆகாமல் 52 பந்துகளில் 80 ரன்களை குவித்தார். இந்த தொடரில் இவர் 3 அரைசதங்களை குவித்துள்ள நிலையில் மொத்தமாக 231 ரன்களை எடுத்துள்ளார்.
விராட் தொடர் நாயகன்
இதைதொடர்ந்து விராட் கோலிக்கு தொடர் நாயகன் விருது அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷனுக்கு இந்த கோப்பையை விராட் கோலி கொடுத்து கௌரவப்படுத்தியுள்ளார். இந்த தொடரின் மூலம் தங்களது அறிமுகப் போட்டிகளில் களமிறங்கிய இவர்களுக்கு அளிக்கப்பட்ட இந்த கௌரவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.