டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் அதிரடி வீரர் சேவாக் விண்ணப்பித்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய பயிற்சியாளராக இருக்கும் கும்ப்ளேவின் பதவிக்காலம் ஜூன் 18ம் தேதியோடு முடிவடைய உள்ளது. இதையடுத்து அவரை அப்பதவியில் நீடிக்க செய்ய பிசிசிஐ தயாராக இல்லை. புதிய பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது பிசிசிஐ.
இந்த விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி முடிவடைந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. தற்போதைய பயிற்சியாளர் அனில் கும்ப்ளே, ஆஸ்திரேலியாவின் டாம் மூடி, இங்கிலாந்தின் ரிச்சர்டு பிபஸ், இந்திய 'ஏ' அணியின் பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புட், முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டோட்டா கணேஷ் ஆகியோர் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்து உள்ளனர்.
இதில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக் பெயரும் இடம்பெற்றுள்ளது. இவர் இதற்கு முன் பயிற்சியாளர் பணியை செய்ததில்லை. தற்போது முடிந்த ஐ.பி.எல். தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆலோசகராக மட்டுமே இருந்துள்ளார். ஆனால், அவர் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருப்பது அனைவரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.
அதேநேரம் கும்ப்ளேவே பயிற்சியாளராகத் தொடரலாமா அல்லது புதிய பயிற்சியாளரை நியமிக்கலாமா என்பதை சச்சின், கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமணன் ஆகியோர் அடங்கிய பிசிசிஐ ஆலோசனைக் குழு முடிவு செய்யும். இருப்பினும், மோதல்கள் மற்றும் புகார்கள் கிளம்புவதால், கும்ப்ளேவை பயிற்சியாளராக தொடரச் செய்ய பிசிசிஐ விரும்பாது என தெரிகிறது.