டெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில், விராட் கோஹ்லியைவிட அதிக ரன்கள் குவித்துள்ளார் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார். இங்கிலாந்தில் மோசமான ரன் குவிப்பு என்ற நிலையில் இருந்து மீண்டு வருவாரா கோஹ்லி என்பதே டெஸ்ட் தொடரின் முக்கிய கேள்வியாக உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் விளையாடி வருகிறது. டி-20 தொடரை இந்தியாவும், ஒருதினப் போட்டித் தொடரை இங்கிலாந்தும் வென்றன. அதைத் தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1ம் தேதி துவங்குகிறது. 2007க்குப் பிறகு, இங்கிலாந்தில் தொடரை வெல்லும் முனைப்புடன் இந்தியா உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் இதுவரை 57 டெஸ்ட்களில் விளையாடியுள்ளது. அதில் இங்கிலாந்து 30ல் வென்றுள்ளது. 21 போட்டி டிராவில் முடிந்துள்ளது. இந்தியா 6 டெஸ்ட்களில் மட்டுமே வென்றுள்ளது.
கடைசியாக 2007ல் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி 1-0 என இங்கிலாந்தில் தொடரை வென்றுள்ளது. கடைசியாக 2014ல் தோனி தலைமையில் இங்கிலாந்து சென்ற இந்தியா அணி 5 போட்டித் தொடரில் 3-1 என தோல்வி அடைந்தது.
இந்த நிலைமையை மாற்றி, இங்கிலாந்துக்கு எதிரான தொடரை வெல்ல வேண்டும் என்று ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்தியா வேகத்தோடு உள்ளது. இந்தத் தொடரில் கேப்டன் விராட் கோஹ்லியின் ஆட்டமே முக்கியமானதாக அமைய உள்ளது. ரன் மெஷின் என்றழைக்கப்படும் கோஹ்லி, இங்கிலாந்துக்கு எதிராக ரன்குவிப்பில் திணறி வருகிறார்.
2014ல் நடந்த 5 டெஸ்ட்களில் விளையாடிய கோரஹ்லி 134 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவருடைய சராசரி 13.40 ஆகும். அந்தத் தொடரில் வேகப்பந்து வீச்சாளரான புவனேஸ்வர் குமார் 27.44 சராசரியுடன் 247 ரன்கள் எடுத்தார். அதில் 3 அரைசதமும் அடங்கும். சுழற்பந்து வீச்சாளரான அமித் மிர்ஸா அந்தத் தொடரில் 38.25 சராசரியுடன் 153 ரன்கள் எடுத்தார். அதில் ஒரு அரை சதமும் அடங்கும்.
ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் அதிக சராசரி கொண்டுள்ளார் விராட் கோஹ்லி. இங்கிலாந்தில் மட்டுமே மோசமான சராசரி உள்ளது. தற்போது நடைபெற உள்ள டெஸ்ட் போட்டிகளில் தொடரை வெல்வதுடன், தனது சராசரியையும் கோஹ்லி உயர்த்திக் கொள்வார் என்று எதிர்பார்க்கலாம்.