வாசிம் அக்ரம் சுயசரிதை
இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைக்கும் வாசிம் அக்ரம், சுல்தான்: தி மெமோயர் என்ற தனது சுயசரிதை புத்தகத்தை எழுதியுள்ளார். இதில் வாசிம் அக்ரமின் இளமை கால வாழ்க்கை, போதைப் பழக்கம், பாகிஸ்தான் கிரிக்கெட், இம்ரான் கான் உடனான அனுபவம் என பல்வேறு விவகாரங்கள் குறித்து எழுதியுள்ளார். இது பாகிஸ்தான் கிரிக்கெட்டில் சில சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
சுயநல கேப்டன்
இந்த புத்தகத்தில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சலீம் மாலிக் கேப்டனாக இருந்தபோது, நான் ஜூனியர் என்பதால் கண்டபடி வேலை வாங்கியதாக வாசிம் அக்ரம் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து வாசிம் அக்ரம் கூறுகையில், பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த சலீம் மாலிக் சுயநலமானவர். என்னை ஒரு வேலைக்காரனை போல் நடத்தினார்.
மசாஜ் செய்ய வற்புறுத்தினார்
ஒருமுறை என்னை மசாஜ் செய்ய கட்டாயப்படுத்தினார். அதுமட்டுமல்லாமல் அவர் துணிகள், ஷூ-க்களை சுத்தம் செய்ய பணிப்பார். அதேபோல் இளம் வீரர்களான ரமீஸ் ராஜா, மோசின் கான், சோயப் முகமது உள்ளிட்டோர் நைட் கிளப்பிற்கு அழைத்த போது கோபம் வந்ததாக தெரிவித்துள்ளார். சலீம் மாலிக் குறித்த வாசிம் அக்ரமின் எழுத்துக்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சலீம் மாலிக் பதிலடி
வாசிம் அக்ரமின் குற்றச்சாட்டுகள் குறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சலீம் மாலிக் கூறுகையில், வாசிம் அக்ரம் எழுதியுள்ள வார்த்தைகள் குறித்து பேசுவதற்காக அவரை அழைத்தேன். இதுவரை அவருடன் பேச முடியவில்லை. அவரின் சுயசரிதை புத்தக விற்பனைக்காக இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். நான் சுயநலமாக இருந்திருந்தால், வாசிம் அக்ரமிற்கு பந்துவீச வாய்ப்பே கொடுத்திருக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.