டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி உலகெங்கும் பெரும் புகழ்பெற்றவர். அவருக்கு ரசிகர்கள் அதிகம். ஆனால், அதே ரசிகர்களால் அவருக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான, 29 வயதாகும் விராட் கோஹ்லிக்கு சமீபத்தில் டெல்லியில் உள்ள மேடம் துஸாட்ஸ் மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை வைக்கப்பட்டது. சச்சின் டெண்டுல்கர், கபில் தேவுக்குப் பிறகு, மெழுகு சிலை வைக்கப்படும் பிரபல கிரிக்கெட் வீரராக கோஹ்லி உள்ளார்.
ஆறு மாதங்களாக பல்வேறு கலைஞர்கள் சேர்ந்து, இந்த சிலையை வடிவமைத்துள்ளனர். அச்சு அசலாக, கோஹ்லியே நேரில் நிற்பதுபோல் இந்த மெழுகு சிலை உள்ளது.
இந்த மெழுகு சிலையை பார்ப்பதற்காக, ரசிகர்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர். ரசிகர்கள் கூட்டம் அதிகமாகி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் கோஹ்லியின் வலது பக்க காது சேதமடைந்துள்ளது.
அதை சரி செய்யும் வரை, கோஹ்லியின் சிலையை யாரும் பார்க்க முடியாது. ரசிகர்களின் இந்த ஆர்வம், அருங்காட்சியக ஊழியர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.